
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது புகழ் பெற்ற சோமநாத் கோவிலுக்குச் சென்றார். இந்தக் கோவில் முதல் முறையாக தாக்கப்பட்டு 1000 ஆண்டுக்குப் பிறகும் நிலைத்து நிற்பதை கொண்டாடும் வகையில் சோமநாத் சுயமரியாதை திருவிழா நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவின் சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கோவில் தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் சௌரியா யாத்திரையிலும் பங்கேற்றார். இதில் 108 குதிரைகள் ஊர்வலத்தை மேளம் அடித்து மோடி தொடங்கி வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி பேசியபோது குறிப்பிட்டதாவது:
நண்பர்களே, சோமநாத் சுயமரியாதைத் திருநாள், வரலாற்றின் சுயமரியாதைக் கொண்டாட்டம் என்பது ஒருபக்கம். இது கடந்த காலப் பயணத்தின் எதிர்காலத்திற்காக, உயிர்ப்புடையதாக வைத்திருக்கும் ஊடகமும் கூட. நாம் இந்தச் சந்தர்ப்பத்தை, நமது இருப்பினை, நமது அடையாளத்தை, வலுவுள்ளதாக்கப் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் கவனித்திருக்கலாம், எந்த ஒரு தேசத்திடத்திலே, சில நூறு ஆண்டுக்காலப் பாரம்பரியம் இருந்தாலும் கூட, அந்த தேசம், அதனைத் தனது அடையாளமாக உலகின் முன்பாக காட்சிப்படுத்துகிறது. ஆனால் பாரதத்திடமோ, சோமநாதரைப் போன்ற ஆயிரமாயிரம் ஆண்டுப் பழமையான இடங்கள் இருக்கின்றன. இந்த இடம், நமது வல்லமை, நம்முடைய எதிர்ப்பு, மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கிறது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக….. விடுதலைக்குப் பிறகு, அடிமைத்தன மனோபாவம் உடைய மனிதர்கள், அதை ஒழித்துக் கட்டுவதில் குறியாய் இருந்தார்கள். அந்த வரலாற்றை மறக்கடிக்க முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாம் நன்கறிவோம், சோமநாதரின் பாதுகாப்பிற்காக, தேசம் எப்படிப்பட்ட உயிர்த்தியாகங்கள் எல்லாம் செய்தது என்று.
ஜாலோரின் கன்ஹாத்தேவன், போன்ற ஆட்சியாளர்களின் முயற்சிகள், வீர் ஹமீர்ஜி கோஹிலுடைய பராக்கிரமம், வேகடாஜி பீல்லுடைய வீரம், இப்படி எத்தனையோ நாயகர்களின் வரலாறு, சோமநாதரின் ஆலயத்தோடு இணைந்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவர்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதேயில்லை.
நம்மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வரலாற்றினைக்கூட, சில வரலாற்றாசிரியர்களும் தலைவர்களும், இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்தார்கள். மதவெறி என்ற மனோபாவத்தை வெறும், சாதாரணமான கொள்ளை என்றுசொல்லி, மூடிமறைக்க புத்தகங்கள் எழுதப்பட்டன. சோமநாதர் ஆலயம் ஒருமுறை அல்ல, பலப்பல முறைகள் தகர்க்கப்பட்டது.
ஒருவேளை சோமநாதரின் மீது, தாக்குதல், கொள்ளையடிக்க மட்டுமே நடத்தப்பட்டது என்று சொன்னால், 1000 ஆண்டுகள் முன்பாக, முதல் பெரிய கொள்ளைக்குப் பிறகு, நின்று போயிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லையே!! சோமநாத்தின் பவித்திரமான விக்கிரகம் தகர்க்கப்பட்டது. மறுபடிமறுபடி ஆலயத்தின் அமைப்பை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் நமக்கு என்ன கற்பிக்கப்பட்டது? சோமநாத் ஆலயம் கொள்ளையடிக்கவே தகர்க்கப்பட்டது என்று? வெறுப்பு, அடக்குமுறை, மற்றும் பயங்கரவாதத்தின் கொடூரமான வரலாறு, நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது. நண்பர்களே, நம்முடைய தர்மத்திலே, நாணயமான எந்த ஒரு மனிதனும், இப்படிப்பட்ட தீவிரவாத எண்ணத்தை ஆதரிக்கவே மாட்டார்கள்.
ஆனால் தாஜா செய்வதிலே வல்லவர்கள் எல்லாம் எப்போதுமே, இந்த பயங்கரவாத சிந்தனைக்கு முன்பாக மண்டியிட்டார்கள். நம் பாரதம் அடிமைத்தளைகளிலிருந்து விடுதலை அடைந்த போது, அப்போது சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்தை மீளெழுப்ப உறுதி பூண்டார். அவரையுமே கூட, தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1951ஆம் ஆண்டிலே, அப்போதிருந்த குடியரசுத் தலைவர், டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கே வருவதற்குகூட, ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. அந்த வேளையிலே, சௌராஷ்ட்டிரத்தின், மிகவும் பிரபலமான, நம்முடைய ஜாம்சாகேப் மகாராஜா திக்விஜய் சிங்ஜி, அவர் முன்னே வந்தார்.
நில ஆர்ஜிதம் தொடங்கி, பாதுகாப்பு முறைமை வரை, அவர் தேசத்தின் கௌரவத்தை அனைத்திற்கும் மேலாக கருதினார். அந்தக்காலத்திலே, சோமநாதர் ஆலயத்திற்காக ஜாம்சாப் அவர்கள், ஒரு இலட்சம் ரூபாய் தானமாக அளித்தார். மேலும் அவர், அறக்கட்டளையின் முதல் தலைவர் என்ற முறையிலே, பெரும் பொறுப்பினை நிறைவேற்றினார்.
சகோதர சகோதரிகளே, துரதிர்ஷ்டவசமாக இன்றும் கூட, நம்முடைய தேசத்திலே, அந்தச் சக்திகள் இருக்கின்றன, முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன, இவர்கள்தாம், சோமநாதர் ஆலயத்தை மீளெழுப்புவதை எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இன்று வாட்களுக்கு பதிலாக, இன்னபிற, ரகசியமான முறையிலே பாரதத்திற்கு எதிரான சூழ்ச்சிகள் பின்னப்படுகின்றன.
ஆகையினால் தான், நாம் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நமக்கு நாமே, சக்தி படைத்தவர்களாக ஆக வேண்டும். நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்மைப் பிரிக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடும், அந்தச் சக்திகளை நாம் தோற்கடித்தே ஆக வேண்டும்.
நண்பர்களே, நாம் நமது நம்பிக்கைகளோடு இணைந்து இருக்கும் போது, நம்முடைய வேர்களோடு இணைந்து இருக்கும் போது, முழு சுயமரியாதையோடு, நம்முடைய பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் போது, நம்முடைய பாரம்பரியம் தொடர்பாக விழிப்போடு இருக்கும் போது, நம்முடைய நாகரீகத்தின் வேர்களும் மேலும் பலமடைகின்றன.
ஆகையினால் அந்த வகையிலே, கடந்த ஓராயிரம் ஆண்டுக்காலப் பயணம், நமக்கெல்லாம், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளும் உத்வேகத்தை அளிக்கிறது.
- தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்




