செங்கோட்டை: இலங்கையில் தனி நாடு கோரிக்கை இல்லை; ஒரே இலங்கை, தமிழர்களுக்கு மாநில சுயாட்சி இதுவே எங்களின் கோரிக்கையாக உள்ளது என்று கூறினார் இலங்கை வடக்கும் மாகாண முதல்வர் விக்னேஸ்வரன். மேலும், வெளிநாட்டில் அகதிகளாக வாழ்பவர்களை மீண்டும் இலங்கை மண்ணில் குடியேறச் செய்ய வேண்டும், இந்தியாவுடனான இலங்கையின் உறவு நெருக்கமானதாகத் தெரியவில்லை; சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறது என்று கூறினார் சி.விக்னேஸ்வரன்.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சித்த மருத்துவ நூல் வெளியீட்டு விழா தமிழ்ப் புத்தாண்டான சித்திரைத் திருநாளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இலங்கையின் தற்போதைய நிலவரம், இலங்கை மண்ணில் மீள் குடியேற்றம், ராஜபட்சவின் வெற்றி என்பது குறித்தெல்லாம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன், “இலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமானாதாக இல்லை. இதனால் ஆட்சியில் உள்ள கூட்டணியிலேயே இரு கட்சிகளும் ஒன்றையொன்று குறை கூறி வருகின்றன. இருப்பினும், வரும் 2020 வரை ஆட்சியைக் கொண்டு செல்ல பிரதமரும் ஜனாதிபதியும் முயற்சி செய்து வருகின்றனர்.
தமிழர்களின் உரிமைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் விளை நிலங்கள், அரசாலேயே சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் தமிழர்கள் தங்கள் வீ்டுகளை விளை நிலங்களை இழந்து தவிக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு அதனை மீண்டும் பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
வடக்கு கிழக்கு மாகாண மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையும் பறி போகிறது. தெற்கிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்து மீன்பிடிக்கச் செய்கின்றனர். இவை அனைத்தையும் சரி செய்ய அரசியல் அதிகாரம் இல்லை. 1987ல் கிடைத்த அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை. அடுத்தடுத்து இயற்றப்பட்ட சட்டங்களால் அந்த உரிமையும் பறி போய்விட்டது.
அரசு அதிகாரிகளே மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை. வடக்கு மாகாண பகுதிகளில் ராணுவம் ஒன்றரை லட்சம் வீரர்களை அங்கிருந்து வெளியேற்ற மறுத்து வருகிறது. விளை நிலங்கள், கட்டடங்கள் எல்லாம் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
இந்தியாவுடனான இலங்கையின் உறவு நெருக்கமானதாகத் தெரியவில்லை. எங்கள் மத்திய அரசு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் எனத் தெரியவில்லை. வடக்கு மாகாண மக்கள் தொகை கணிசமாகக் குறைந்து விட்டது.
வெளிநாடுகளில் அகதிகளாக உள்ளவர்கள் இங்கே மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் தற்போது தனி நாடு கோரிக்கை இல்லை. ஒரே இலங்கை; மாநில சுயாட்சி வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது என்று கூறினார் விக்னேஸ்வரன்.
இதனிடையே, நேற்று மாலை, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தென்காசிக்கு அருகில் உள்ள கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வருவார் என்று செய்திகள் பரப்பப் பட்டன. தென்காசி, பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு மாலை 5 மணி அளவில் விக்னேஷ்வரன் சுவாமி தரிசனத்துக்கு வருவார் என்று தகவல் பரப்பப் பட்ட நிலையில், அவர் வருகை ரத்து செய்யப் பட்டதாக பின்னர் அறிவிக்கப் பட்டது.