புது தில்லி: கொலைச் சதிகள் குறித்த தகவல்கள் வெளிவருவதால், மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. அத்துடன், மாவோயிஸ்டுகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய தகவல் வெளியானதன் எதிரொலியாக, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டு செல்வதையும் கை கொடுப்பதையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடிக்கு சிறப்பு பாதுகாப்புப் படையினர் அறிவுரையும் ஆலோசனையும் அளித்துள்ளனர்.
பிரதமர் மோடியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சதித்திட்டங்களை தீட்டியுள்ளதாக புனே போலீஸாரின் புலனாய்வு விசாரணையில் தகவல் தெரிவிக்கப் பட்டது. எனவே சாலை வழி பிரச்சார பயணங்களை பயன்படுத்தி, ராஜீவ்காந்தி கொலைசெய்யப் பட்டதைப் போல இதையும் நிகழ்த்த மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளனர் என்று, அவர்களின் இமெயில்.,களைத் திறந்து பார்த்தப் போது தெரியவந்தது.
இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த புனே போலீஸார், இந்தக் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். மேலும், மத்திய உள்துறைக்கும் அளித்தனர். இது குறித்து மத்திய உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சிறப்பு பாதுகாப்புப் படையான எஸ்பிஜி படையினரும், சிபிஜி எனப்படும் பிரதமருக்கு மிக நெருக்கமாக இருந்து பாதுகாப்பு வழங்கும் அணியினரும் எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளனர். மேலும், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புப் படையில் சிஏடி எனப்படும் பதில் தாக்குதல் நடத்தும் குழுவினரும் எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளனர்.
பொதுவாக, பிரதமர் மோடி மக்களுடன் அதிக நெருக்கம் காட்டுவார். தான் செல்லும் இடங்களில் சாலையோரம் தன்னைக் காணவரும் பொதுமக்கள் குவிந்திருந்தால், காரில் இருந்து இறங்கிச் சென்று, அவர்களுடன் கை அசைத்து, கைகொடுத்து, பேசி மகிழ்வார். இப்படி, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களை சந்திப்பதை இனி தவிர்க்க வேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இனி, முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென பொதுமக்கள் மத்தியில் செல்வது, ரோட்ஷோ எனப்படும் சாலையோரம் கூடியுள்ள மக்கள் மத்தியில் முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென செல்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.



