புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அல் காய்தா பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ‘‘யுடியூப்’’ இணைய தளத்தில் சுமார் 9 நிமிடம் ஓடும் வீடியோவில் ஆசிம் உமர் என்பவன் இந்த மிரட்டலை விடுத்துள்ளான். பிரதமர் நரேந்திர மோடி பெயரைக் குறிப்பிட்டு, பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 தினங்களாக இது குறித்து ஆய்வு செய்யப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் கருத்தரங்கங்கள், விழாக்களில் எத்தகைய பாதுகாப்பு நடைமுறையை கடைபிடிப்பது என்று மறு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அவர் தில்லியை விட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்லும் போது குறைந்தபட்சம் அவருக்கு 5 முதல் 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் செல்லும் பாதைகளில் கண்காணிப்பை இரட்டிப்பாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 9ஆம் தேதி கொல்கத்தாவில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி பேலூர் மடத்துக்கு செல்ல உள்ளார். பிரதமர் மோடி கொல்கத்தாவில் இறங்கியதும் அவருக்கு சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய தில்லியில் இருந்து சிறப்பு கமாண்டோ படை நாளை மேற்கு வங்கம் செல்கிறது.
அல் காய்தா மிரட்டல்: மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
Published:

