spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஏழைகளின் மருத்துவர் ஜெயச்சந்திரன், ஏழையரின் தாய் சுலகெட்டி நரசம்மாவுக்கு மனதின் குரலில் மோடி புகழாரம்!

ஏழைகளின் மருத்துவர் ஜெயச்சந்திரன், ஏழையரின் தாய் சுலகெட்டி நரசம்மாவுக்கு மனதின் குரலில் மோடி புகழாரம்!

- Advertisement -
pm narendra modi mann ki baat

பாரதம் ஏழ்மையில் இருந்து விடுதலை அடைந்து வருவதை ‘உலகம்’ சொல்கிறது என்று மனதின் குரலில் பேசிய மோடி, சென்னையில் அண்மையில் காலமான டாக்டர் ஜெயச்சந்திரன், கர்நாடகாவின் சுலகெட்டி நரசம்மா ஆகியோருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

அவரது வானொலி உரையில் இருந்து…

மனதின் குரல், 51ஆவது – பகுதி ஒலிபரப்பு நாள் : 30.12.18 – பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம்: சென்னை வானொலி நிலையம்.
தமிழாக்கம், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

பாரதம் ஏழ்மையில் இருந்து விடுதலை அடைந்து வருகிறது என்பதை உலக அமைப்புகள் அடித்துக் கூறிவதாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் 1எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2018ஆம் ஆண்டு நிறைவைக் காணவிருக்கிறது, நாம் 2019ஆம் ஆண்டிலே காலெடுத்து வைக்கவிருக்கிறோம்.

இது போன்ற வேளையிலே, கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிக் கருத்தாய்வுகளில் ஈடுபடுவதும், வரவிருக்கும் ஆண்டிலே மேற்கொள்ளப்பட வேண்டிய உறுதிப்பாடுகளைப் பற்றிய பேச்சுக்களும் காதிலே வந்து விழுவது என்பது இயல்பான விஷயம் தானே!! அது தனி மனிதனின் வாழ்க்கையாகட்டும், சமுதாயப் போக்காகட்டும், நாட்டின் வாழ்க்கையாகட்டும் – அனைவருமே பின்னே திரும்பியும் பார்க்க வேண்டும், வரவிருக்கும் நாட்களையும், தொலைவான காலத்தையும் பார்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்; அப்போது தான் அனுபவங்களின் ஆதாயங்கள் நமக்கு வாய்ப்பதோடு, புதிய ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் உதயமாகும்.

நாம் என்ன செய்தால் நமது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நாட்டையும் சமூகத்தையும் முன்னெடுத்துச் செல்ல பங்களிப்பு அளிக்க முடியும் என்பது தொடர்பாக நமது எண்ணங்கள் இருக்க வேண்டும். உங்களனைவருக்கும் 2019ஆம் ஆண்டுக்கான ஏராளமான நல்வாழ்த்துக்கள். சரி, 2018ஆம் ஆண்டினை நாம் எவ்வாறு நினைவில் கொள்ளலாம் என்று நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள், இல்லையா?? பாரத நாடு ஒரு தேசம் என்ற வகையில், தனது 130 கோடி மக்களின் திறன்கள் வடிவில் எப்படி 2018ஆம் ஆண்டினை நினைவில் தாங்கும் – இப்படி நினைவு கொள்வதும் முக்கியமானது. இது நமக்கெல்லாம் கௌரவம் அளிக்கக் கூடியதாக அமையும்.

2018இலே, உலகின் மிகப்பெரிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரதம் திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு கிராமம் வரையிலும் மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டு விட்டது. உலகின் மதிப்புநிறைந்த அமைப்புகளெல்லாம், பாரதம் சாதனை படைக்கும் வேகத்தில், ஏழ்மையிலிருந்து விடுதலை அடைந்து வருவதாக அடித்துச் சொல்லியிருக்கின்றன. நாட்டுமக்களும் தங்களது ஆணித்தரமான மனவுறுதி காரணமாக தூய்மை உள்ளடக்கல் அதிகரித்து, 95 சதவீதத்தைக் கடந்து தனது பயணத்தில் முன்னேறி வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு செங்கோட்டையிலிருந்து முதன்முறையாக, ஆஸாத் ஹிந்த் அரசின் 75ஆம் ஆண்டு நிறைவின் போது மூவண்ணக்கொடி ஏற்றப்பட்டது. நாட்டை ஒற்றுமை எனும் இழையில் இணைத்த மாமனிதர், சர்தார் வல்லப்பாய் படேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உலகின் மிக உயரமான திருவுருவச் சிலையான Statue of Unity, ஒற்றுமைச் சிலை, நம் நாட்டில் உருவாக்கம் பெற்றது. உலக அரங்கிலே நாட்டின் பெருமிதம் உயர்ந்தது.

நாட்டுக்கு ஐ.நா. அமைப்பின் சுற்றுச்சூழல் துறையில் மிக உயரிய, Champions of the Earth விருது அளிக்கப்பட்டது. சூரியசக்தி மற்றும் சூழல் மாற்றம் துறையில் பாரத நாட்டின் முயற்சிகளுக்கு உலகம் அங்கீகாரம் அளித்தது. பாரதத்தில், சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பின் முதல் மாநாடான International Solar Allianceக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நமது சமூக முயற்சிகள் காரணமாக, நமது தேசம், ease of doing businessஆன வியாபாரம் செய்வதில் சுலபத்தன்மை தரநிலையில் இதுவரை காணாத அளவுக்கு முன்னேற்றம் கண்டது. நாட்டின் தற்காப்புக்குப் புதிய பலம் வாய்க்கப் பெற்றது.

இந்த ஆண்டிலே, நமது தேசம் Nuclear Triadஐ வெற்றிகரமாக நிறைவேற்றியது, அதாவது நமது நீர், நிலம், வானம் – இந்த மூன்றிலும் அணுசக்தி நிறைவை எட்டியிருக்கிறோம். நாட்டின் பெண்கள், நாவிகா சாகர் பரிக்ரமா என்ற படகில் உலகைச் சுற்றி வருதல் முயற்சி வாயிலாக நாட்டின் பெயருக்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்கள். வாராணசியில் பாரதம் முதல் நீர்வழிப் போக்குவரத்தைத் தொடக்கியது. இதன் மூலம் நீர்வழிகள் துறையில் புதிய புரட்சிக்கு வித்திடப்பட்டிருக்கிறது. நாட்டிலே மிக நீளமான ரயில்-ரோடு பாலமான போகிபீல் பாலம் மக்கள் சேவைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.

சிக்கிம் மாநிலத்தின் முதலாவதும், தேசத்தின் 100ஆவதுமான விமானநிலையம் – பாக்யோங் நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பைக் க்ரிக்கெட் போட்டியிலும், கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டியிலும் பாரதம் வெற்றிவாகை சூடியது. இந்த முறை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாரதம் பெரிய அளவிலே பதக்கங்களை வென்றிருக்கிறது.

பாரா ஆசிய விளையாட்டுக்களில் பாரதம் மிக அருமையான செயல்பாடுகளைப் புரிந்திருக்கிறது. நான் ஒவ்வொரு இந்தியரின் முயற்சிகள் பற்றியும், நமது சமூக முயற்சிகளைப் பற்றியும் மட்டுமே பேசினால், நமது மனதின் குரல் மிக நீண்டு, 2019ஆம் ஆண்டு கூட பிறந்து விடும். இவை அனைத்தும் 130 கோடி நாட்டுமக்களின் இடைவிடாத முயற்சிகளால் தான் கனிந்திருக்கின்றன. 2019ஆம் ஆண்டிலும், பாரதம் முன்னேற்றம், வளர்ச்சி என்ற பயணத்திலே முனைப்போடும் முயற்சியோடும், அயர்ச்சியில்லாமல் ஓய்வில்லாமல் வெற்றிநடை போடும் என்பதில் எனக்கு அசையாத ஆணித்தரமான நம்பிக்கை உண்டு, நாடு புதிய சிகரங்களை எட்டும், மேலும் பொலிவுடன் சாதனைகள் படைக்கும், இது என் ஆழ்மன உறுதி.

எனதருமை நாட்டுமக்களே, இந்த டிசம்பர் மாதத்தில் நாம் சில அசாதாரணமான நாட்டுமக்களை இழந்திருக்கிறோம். டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று சென்னையைச் சேர்ந்த டாக்டர். ஜெயச்சந்திரன் இறைவனடி சேர்ந்தார். டாக்டர். ஜெயச்சந்திரனை மக்கள் பிரியத்தோடு ‘மக்கள் மருத்துவர்’ என்று அழைப்பார்கள், ஏனென்றால் அவர் மக்களின் மனங்களிலே வசித்தார். டாக்டர். ஜெயச்சந்திரன் ஏழைகளுக்கு மிக குறைவான செலவில் சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்றவர். அவர் எந்த நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முனைப்போடு இருந்தார் என்று மக்கள் கூறுகிறார்கள். தன்னிடத்தில் சிகிச்சைக்காக வரும் வயதான நோயாளிகளுக்கு போக்குவரத்து செலவையும் கூட அவரே கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!! சமூகத்துக்குக் கருத்தூக்கம் அளிக்கவல்ல இவரின் சேவை பற்றிய தகவல்களை thebetterindia.com என்ற இணையதளத்தில் நான் படித்திருக்கிறேன்.

இதைப் போலவே கர்நாடகத்தைச் சேர்ந்த சுலகிட்டி நரசம்மாவும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார். சுலகிட்டி நரசம்மா, கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்ப்பதில் உதவும் உதவியாளராக இருந்தார். அவர் கர்நாடகத்திலே, குறிப்பாக அங்கே தொலைவான பகுதிகளில் ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்குத் தனது சேவைகளை அளித்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

டாக்டர். ஜெயச்சந்திரன், சுலகிட்டி நரசம்மா போன்ற பல உத்வேகம் அளிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் சமூகத்தின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்கள். நாம் உடல்நலப் பராமரிப்பு பற்றிப் பேசும் வேளையில், இங்கே உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்நோரில் மருத்துவர்களின் சமூக முயற்சிகள் பற்றியும் பேச விரும்புகிறேன்.

நகரில் சில இளைய மருத்துவர்கள் முகாம் நடத்தி, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக, கடந்த சில நாட்கள் முன்பாக, எங்கள் கட்சியின் சில உறுப்பினர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். இங்கிருக்கும் இருதயம், நுரையீரல்கள் தீவிரப் பராமரிப்பு மையத்தின் வாயிலாக, ஒவ்வொரு மாதமும் இப்படிப்பட்ட மருத்துவ முகாங்கள் நடத்தப்படுகின்றன. இங்கே பலவகையான நோய்களுக்கும் இலவச சோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சைக்கான முறையும் செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பல ஏழை நோயாளிகள் இந்த முகாம் மூலம் இன்று பயனடைந்து வருகிறார்கள். சுயநலமில்லாத உணர்வோடு சேவையில் ஈடுபடும் இந்த மருத்துவ நண்பர்களின் உற்சாகம் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியதாகும். சமூக முயற்சிகள் காரணமாகவே தூய்மை பாரதம் இயக்கம் ஒரு வெற்றிகரமான இயக்கமாக வடிவெடுத்திருக்கிறது என்பதை இன்று இங்கே நான் மிகப் பெருமிதம் பொங்கத் தெரிவிக்க விரும்புகிறேன்.

சில நாட்கள் முன்பாக, மத்தியபிரதேசத்தின் ஜபல்புரில், ஒரே நேரத்தில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தூய்மை இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்கள் என்ற தகவல் என்னிடத்தில் சிலர் தெரிவித்தார்கள். தூய்மையின் இந்த மஹாயாகத்தில் நகராட்சி, தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள்-கல்லூரிகளின் மாணவர்கள், ஜபல்புரின் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் மிக உற்சாகத்தோடு பங்கேற்றார்கள். நான் சற்று முன்னதாக thebetterindia.com பற்றிக் கூறியிருந்தேன் அல்லவா. அங்கே தான் டாக்டர். ஜெயச்சந்திரன் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது; இவை போன்ற உத்வேகம் அளிக்கவல்ல தகவல்களை நான் thebetterindia.com இணையதளத்திலே சென்று தெரிந்து கொள்ள முயல்கிறேன்.

இப்போதெல்லாம் பல இணையதளங்கள் நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கவல்ல இப்படிப்பட்ட சிறப்பான மனிதர்களின் வாழ்க்கை பற்றி தெரிவிக்கின்றன என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது thepositiveindia.comஐயே எடுத்துக் கொள்வோமே!! இதிலே சமூகத்தில் ஆக்கப்பூர்வமான உணர்வைப் பரப்பவும் சமூகத்தில் அதிக புரிந்துணர்வை ஏற்படுத்துவதையும் மேற்கொண்டு வருகிறது. இதைப் போலவே yourstory.comஇலே புதுமை படைக்கும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் பற்றிய வெற்றிக் கதைகள் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதைப் போலவே samskritabharati.in வாயிலாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே சம்ஸ்க்ருத மொழியைக் கற்றுக் கொள்ளலாம். சரி, நாம் ஒரு வேலை செய்வோமா? இவை போன்ற இணையத்தளங்கள் பற்றிய தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொள்வோமா?

நாமனைவரும் ஆக்கப்பூர்வமான உணர்வை நன்றாகப் பரப்புவோம். இதன் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நமது நாயகர்களைப் பற்றி பெருவாரியான மக்கள் தெரிந்து கொள்வார்கள். எதிர்மறை உணர்வைப் பரப்புவது என்பது மிக எளிதானதாக இருக்கலாம், ஆனால் நமது சமூகத்தில், நமது அக்கம்பக்கத்தில் பல நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன, இவையனைத்தும் 130 கோடி நாட்டுமக்களின் சமூக முயற்சிகள் காரணமாகவே நடைபெற்று வருகின்றன.

அனைத்துச் சமுதாயங்களிலும் விளையாட்டுக்களுக்கென ஒரு சிறப்பிடம், மகத்துவம் இருக்கின்றது. விளையாடும் போது, அதைப் பார்ப்பவர்களின் மனங்களிலும் சக்தி நிரம்புகிறது. விளையாட்டு வீரர்களின் பெயர், அடையாளம், அவர்களிடத்தில் மரியாதை போன்ற பல விஷயங்களை நாம் உணர்கிறோம். ஆனால், சில வேளைகளில் இவற்றின் பின்னணியில் பல விஷயங்கள், விளையாட்டு உலகையும் விடப் பெரிய விஷயங்கள் இருக்கின்றன.

நான் கஷ்மீரத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, ஹனாயா நிஸார் பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன். இவர் கோரியாவில் நடைபெற்ற கராட்டே போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். ஹனாயா 12 வயது நிரம்பிய சிறுமி, கஷ்மீரத்தின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர். ஹனாயாவின் கடின உழைப்பு, முனைப்பின் காரணமாக கராட்டே பயிற்சி பெற்றார், இதனை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டார், சாதனை படைத்துக் காட்டியிருக்கிறார்.

அவரது எதிர்காலம் பிரகாசமானதாக இருக்க வேண்டும் என்று நாட்டுமக்கள் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகிறேன். ஹனாயாவுக்கு ஏராளமான நல்வாழ்த்துக்கள், நல்லாசிகள். இவரைப் போலவே, 16 வயது நிரம்பிய மற்றொரு சிறுமி ரஜனி பற்றியும் ஊடகங்களில் நிறைய செய்திகள் வந்தன, நீங்களும் கண்டிப்பாக படித்திருப்பீர்கள்.

ரஜனி பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இளநிலை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். ரஜனி பதக்கத்தை வென்றவுடன் உடனடியாக பக்கத்தில் இருக்கும் ஒரு பால் கடைக்குச் சென்று ஒரு கோப்பை பால் குடித்தார். இதன் பின்னர், ரஜனி தனது பதக்கத்தை ஒரு துணியில் சுற்றி, தனது பையிலே வைத்து விட்டார்.

ஆமாம், ரஜனி ஏன் ஒரு கோப்பை பால் அருந்தினார் என்று நீங்கள் எல்லோரும் யோசிப்பீர்கள், இல்லையா? அவர் தனது தந்தையார் ஜஸ்மேர் சிங் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதைச் செய்தார், அவர் பானீபத்தில் ஒரு கடையில் லஸ்ஸி விற்பனை செய்து வருகிறார். தான் இந்த நிலையை எட்ட தனது தந்தை மிகுந்த தியாகத்தைச் செய்திருப்பதாகவும், பல கஷ்டங்களைச் சகித்துக் கொண்டதாகவும் ரஜனி பின்னர் தெரிவித்தார்.

ஜஸ்மேர் சிங் அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் ரஜனி, அவரது சகோதர சகோதரிகள் எழுந்திருக்கும் முன்பாக வேலைக்குச் சென்று விடுவார். தான் குத்துச் சண்டை கற்றுக் கொள்ள விரும்புவதாக ரஜனி தன் தந்தையிடம் தெரிவித்த போது, இதற்காக இயன்ற அனைத்து தேவைகளையும் இவரது தந்தையார் சேகரித்து, இவருக்குத் தெம்பை அளித்திருந்தார். பழைய கையுறைகளைக் கொண்டே தன் பயிற்சியை ரஜனி தொடங்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அப்போதெல்லாம் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலைமை சீராக இருக்கவில்லை. இத்தனை இடர்களை எல்லாம் தாண்டிய பின்னரும் கூட, ரஜனி தன்னம்பிக்கையைக் கைவிடவில்லை, தொடர்ந்து குத்துச்சண்டையைக் கற்றுக் கொண்டு வந்தார். அவர் செர்பியா நாட்டிலும் கூட ஒரு பதக்கத்தை வென்றிருக்கிறார்.

நான் ரஜனிக்கு நல்வாழ்த்துக்களையும் என் நல்லாசிகளையும் தெரிவிக்கிறேன். ரஜனியுடன் இணைந்து பயணித்து அவரது ஊக்கத்துக்குக் குந்தகம் வராமல் காத்தளித்த அவரது பெற்றோரான ஜஸ்மேர் சிங்-உஷா ராணி தம்பதியருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்த ஆண்டு புணேயைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய ஒரு இளம்பெண்ணான வேதாங்கீ குல்கர்ணீ, சைக்கிளில் உலகத்தையே மிக விரைவாக வலம் வந்த முதல் ஆசியப் பெண்ணானார்.

தினம் சுமார் 300 கி.மீட்டர் என்ற வீதத்தில், 159 நாட்கள் அவர் பயணித்தார். சற்றுக் கற்பனை செய்து பாருங்கள், தினம் 300 கி.மீ. சைக்கிள் பயணம்!! சைக்கிள் செலுத்துவதன் மீது அவருக்கு இருக்கும் தீராத ஆர்வம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இவை போன்ற சாதனைகள், இப்படிப்பட்ட வெற்றிகள் பற்றிக் கேள்விப்படும் போது நமக்கு கருத்தூக்கம் பிறக்கிறது இல்லையா?? குறிப்பாக எனது இளைய நண்பர்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்படும் போது, நாமுமே கூட இடர்களைத் தாண்டி ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது. மனவுறுதியும், தளராத தன்னம்பிக்கையும் இருந்தால், தடைகள் தளர்ந்து போகும். இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுக்களை நாம் கேட்கும் போது, நமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஒரு புதிய உத்வேகம் ஊற்றெடுக்கிறது.

எனதருமை நாட்டுமக்களே, ஜனவரியில் உற்சாகமும் உல்லாசமும் கொப்பளிக்கும் பல பண்டிகைகள் வரவிருக்கின்றன – லோஹ்டீ, பொங்கல், மகர சங்கராந்தி, உத்தராயணம், மாக பிஹு, மாகீ என இந்த அனைத்துப் பண்டிகைகளின் வேளையில் பாரதம் நெடுக பாரம்பரியமான பல நடனங்கள் தங்கள் வண்ணங்களை வெளிப்படுத்தும், பல இடங்களில் அறுவடைக்குத் தயாராகும் சந்தோஷத்தில் லோஹ்டீ கொளுத்தப்படும், பல இடங்களில் வானத்தில் வண்ணமயமான காற்றாடிகள் உயர்வதை நாம் காண முடியும், வேறு பல இடங்களில் திருவிழாக் காட்சிகள் கண்முன் விரியும், இன்னும் சில இடங்களில் விளையாட்டுக்கள் அணிவகுக்கும், மேலும் பல இடங்களில் எள்ளும் வெல்லமும் உண்ண அளிக்கப்படும். மக்கள் ஒருவருக்கொருவர், தில் குட் க்யா – ஆணி கோட் – கோட் போலா “तिल गुड घ्या – आणि गोड़ – गोड़ बोला என்று கூறிக் கொள்வார்கள்.

இந்த அனைத்துப் பண்டிகைகளின் பெயர்களும் வேறுவேறானவையாக இருக்கலாம் ஆனால், அனைத்தையும் கொண்டாடும் உணர்வு ஒன்று தான். இந்தக் கொண்டாட்டங்கள் ஏதோ ஒரு விதத்தில் அறுவடை, உழவு ஆகியவற்றோடு இணைந்தவை, விவசாயியோடு இயைந்தவை, கிராமங்களோடு கலந்தவை, பயிர்பச்சைகளோடு ஒருங்கிணைந்தவை.

இந்த நேரத்தில் சூரிய உத்தராயண புண்ணியகாலம், சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் வருகிறது. இதன் பிறகு மெல்ல மெல்ல பகல் வேளை அதிகரிக்கத் தொடங்குகிறது, குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்வது தொடங்குகிறது. நமக்கு அன்னமிடும் விவசாய சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். வேற்றுமையில் ஒற்றுமை – ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் சுகந்தம், நமது பண்டிகைகளின் வாயிலாக மணம் பரப்புகிறது.

நமது பண்டிகைகள், நன்னாட்கள் ஆகியன இயற்கையோடு எத்தனை நெருங்கிய உறவு கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் காண முடிகிறது. பாரத நாட்டுக் கலாச்சாரத்தில், சமூகமும் இயற்கையும் இருவேறுபட்டவையாகக் கருதப்பட்டதே கிடையாது. இங்கே தனிமனிதனும் சமூகமும் ஒன்று தான். இயற்கையுடனான நமது நெருங்கிய பந்தத்துக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு உண்டு – பண்டிகைகளை ஆதாரமாகக் கொண்ட பஞ்சாங்கம். இதில் ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள், பண்டிகைகளுடன், கிரகங்கள் நட்சத்திரங்களின் குறிப்பு காணப்படுகிறது. இயற்கை மற்றும் வானவியல் நிகழ்வுகளுடன் நமது தொடர்பு எத்தனை பழமையானது என்பது பாரம்பரியமான இந்த பஞ்சாங்கங்களிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரியும்.

சந்திரன் மற்றும் சூரியனின் வேகத்தை ஆதாரமாகக் கொண்டு, சந்திரன் மற்றும் சூரிய பஞ்சாங்கங்களின்படி, திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் தேதிகள் தீர்மானம் செய்யப்படுகின்றன. யார் எந்த பஞ்சாங்கத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து இது அமைகிறது. பல இடங்களில் கிரகங்கள்-நட்சத்திரங்களின் இருப்புக்கு ஏற்றபடி, திருவிழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. குடீ பட்வா, சேடீசண்ட், உகாதி ஆகிய இவையனைத்தும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கப்படி கொண்டாடப்படுகின்றன; ஆனால் தமிழ்ப்புத்தாண்டு, விஷு, வைசாக், பைசாகீ, பொய்லா பைசாக், பிஹு என இவையனைத்தும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கத்தின் படி கொண்டாடப்படுகின்றன.

நமது பல பண்டிகைகள் நதிகள், நீர் ஆகியவற்றைப் பேணும் உணர்வில், சிறப்பாக உருவாக்கம் பெற்றிருக்கின்றன. சட் புண்ணிய தினத்தன்று நதிகள், நீர்நிலைகளில் சூரிய வழிபாடு செய்யப்படுகிறது. மகர சங்கராந்தியின் போது இலட்சக்கணக்கான-கோடிக்கணக்கான மக்கள் புண்ணிய நதிகளில் புனித நீராடுகிறார்கள்.

நமது பண்டிகைகளும் திருவிழாக்களும் சமூக விழுமியங்கள் பற்றிய கல்வியை நமக்கு அளிக்கின்றன. ஒருபுறம், இவற்றுக்கு புராணரீதியிலான மகத்துவம் இருக்கின்றது என்றால், வேறு ஒருபுறத்தில் பண்டிகைகள் சகோதர உணர்வுடன் வாழும் உத்வேகத்தை மிக இயல்பான, எளிமையான முறையிலே நமக்குக் கற்றுத் தருகின்றன. இன்று உங்கள் அனைவருக்கும் 2019ஆம் ஆண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்; இனிவரும் பண்டிகைகளில் நீங்கள் முழுமையாகக் களிப்புற்று மகிழுங்கள். இந்த உற்சவங்களின் போது நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் பாரதத்தின் பன்முகத்தன்மை, அதன் கலாச்சாரத்தின் அழகை அனைவரும் கண்டு ரசிக்க முடியும்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது கலாச்சாரத்தில் இப்படிப்பட்ட விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன, இவை நமக்குப் பெருமிதம் அளிக்கின்றன. நாம் உலகின் முன்பாக பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கூற முடியும் பலவற்றில் ஒன்று கும்ப மேளா. நீங்கள் கும்ப மேளா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். திரைப்படங்களிலும் கூட இவற்றின் பெருமை மற்றும் விசாலத்தன்மை பற்றி நிறைய பார்த்திருக்கலாம், இது உண்மையும் கூட.

கும்ப மேளா மகத்தான பரிமாணம் கொண்டது. எத்தனை தெய்வீகம் நிறைந்ததோ, அத்தனை மகோன்னதம் நிரம்பியது. நாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து கும்பமேளாவுடன் இணைகிறார்கள். கும்பமேளாவில் நம்பிக்கை, ச்ரத்தை ஆகியவற்றுடன் மக்கள் சமுத்திரம் வந்து கலக்கிறது. ஒரே வேளையில் ஓரிடத்தில் நாட்டின் அயல்நாடுகளின் இலட்சோபலட்சம் பேர் இணைகிறார்கள். கும்பமேளா என்ற பாரம்பரியம் நமது மகத்தான கலாச்சார மரபிலே முகிழ்த்து மணக்கும் அருமலர்.

இந்த முறை ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி, பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்படவிருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற கும்பமேளா உங்கள் அனைவரையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கும்பமேளாவின் பொருட்டு துறவிகளும் புனிதர்களும் வரத் தொடங்கி விட்டார்கள். கடந்த ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு கும்பமேளாவை INTANGIBLE CULTURAL HERITAGE OF HUMANITY, அதாவது மனிதகுலத்தின் அருவமான பண்பாட்டு மரபு என்ற பட்டியலில் இணைத்திருப்பதிலிருந்து இதன் சிறப்பான மகத்துவத்தை நம்மால் கணக்கிட முடியும்.

சில நாட்கள் முன்னதாக பல நாடுகளின் தூதுவர்கள் கும்பமேளாவுக்காக நடந்துவரும் தயாரிப்புக்களைப் பார்த்துச் சென்றார்கள். அங்கே ஒரே நேரத்தில் பல நாடுகளின் கொடிகளும் பறக்க விடப்பட்டன. பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் இந்த கும்பமேளாவில் பங்கெடுக்க 150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் வரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. கும்பமேளாவின் தெய்வீகத்தன்மையால் பாரதத்தின் மகோன்னதம் உலக அரங்கிலே தன் மாட்சிமையைப் பறைசாற்றும். தன்னைத் தானே உணர்வதற்கு ஒரு மிகப்பெரிய கருவி கும்பமேளா, இங்கே வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்ட அனுபவங்கள் வாய்க்கின்றன.

உலகியல் விஷயங்களை ஆன்மீகக் கண்கொண்டு பார்க்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள். குறிப்பாக இது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக மிளிரும் வாய்ப்பை இளைஞர்களுக்கு அளிக்கிறது. நான் சில நாட்கள் முன்பாக பிரயாக்ராஜ் சென்றிருந்தேன். அங்கே கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் மிக விமர்சையாக நடைபெறுவதை என்னால் காண முடிந்தது. பிரயாக்ராஜைச் சேர்ந்த மக்கள், கும்பமேளாவின் பொருட்டு அதிக உற்சாகத்தோடு காணப்படுகிறார்கள்.

அங்கே நான் Integrated Command & Control Centre, ஒருங்கிணைந்த ஆணை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மக்களுக்கு அர்ப்பணித்தேன். பக்தர்களுக்கு இதனால் கணிசமாக உதவிகள் கிடைக்கும். இந்த முறை கும்பமேளாவில் தூய்மைக்கு அதிக வலு சேர்க்கப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளில் சிரத்தையுடன் கூடவே தூய்மையும் இருக்கும், தொலைவான பகுதிகளுக்கும் இதுபற்றிய நற்செய்தி சென்றடையும்.

இந்த முறை பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடலுக்குப் பிறகு அக்ஷயவடத்தின் புனித தரிசனத்தையும் செய்ய முடியும். மக்களின் நம்பிக்கையின் சின்னமான இந்த அக்ஷயவடம் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கோட்டையில் அடைபட்டுக் கிடந்தது. இதனால் பக்தர்கள் விரும்பினாலும் இதனை தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது. இப்போது அக்ஷயவடத்தின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்து விடப்பட்டிருக்கின்றன. நான் உங்களனைவரிடமும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் எப்போது கும்பமேளா சென்றாலும், அதன் பல்வேறு தன்மைகளையும் படங்களையும் சமூக ஊடகத்தில் கண்டிப்பாகத் தரவேற்றம் செய்து பகிருங்கள். இதன்மூலம் பெருவாரியான மக்களுக்குக் கும்பமேளா பற்றித் தெரிந்து கொள்ள உத்வேகம் கிடைக்கும்.

ஆன்மீகம் நிறைந்த இந்தக் கும்பம், பாரத தத்துவங்களின் மஹாகும்பமாகட்டும்.
நம்பிக்கையின் இந்தக் கும்பம், தேசியத்தின் மஹாகும்பமாகட்டும்.
தேச ஒற்றுமையின் மஹாகும்பமாகட்டும்.
பக்தர்களின் இந்தக் கும்பம், உலக சுற்றுலாப் பயணிகளின் மஹாகும்பமாகட்டும்.
கலைத்திறத்தின் இந்தக் கும்பம், படைப்பு சக்திகளின் மஹாகும்பமாகட்டும்.

என் மனம் நிறைந்த நாட்டுமக்களே, ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசுத் திருநாளை முன்னிட்டு நாட்டுமக்களின் மனதிலே நிறை உற்சாகம் காணப்படும். இந்த நாளின் போது நாமனைவரும் அரசியல் அமைப்புச் சட்டத்தை நமக்களித்த மாமனிதர்களை நினைவு கூர்கிறோம். இந்த ஆண்டு நாம் வணக்கத்துக்குரிய பாபூவின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கொண்டாடி வருகிறோம்.

தென்னாப்பிரிக்காவின் குடியரசுத்தலைவர் சிரில் ராமாஃபோஸா அவர்கள், இந்த ஆண்டு குடியரசுத் திருநாளின் முக்கிய விருந்தினராக இந்தியா வருகை புரிய இருக்கிறார் என்பது நம்மனைவருக்கும் பேற்றினை அளிக்கும் விஷயம். வணக்கத்துக்குரிய பாபுவிற்கு தென்னாப்பிரிக்காவுடன் இணைபிரியாத ஒரு தொடர்பு இருந்து வந்தது. இதே தென்னாப்பிரிக்காவில் தான் மோஹன், மஹாத்மாவானார். தென்னாப்பிரிக்காவில் தான் காந்தியடிகள் தனது முதல் சத்தியாகிரஹத்தை தொடங்கினார், நிறவேற்றுமைக்கு எதிராகத் தீர்மானமாக குரல் கொடுத்தார். அவர் ஃபீனிக்ஸ் மற்றும் டால்ஸ்டாய் பண்ணைகளை நிறுவினார், அங்கிருந்து உலகெங்கிலும் அமைதி மற்றும் நீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.

2018ஆம் ஆண்டு – நெல்ஸன் மண்டேலா அவர்கள் பிறந்த நூறாவது ஆண்டு என்ற முறையிலேயும் கொண்டாடப்படுகிறது. அவரை மடீபா என்றும் அழைப்பார்கள். நெல்ஸன் மண்டேலா அவர்கள் இனவேற்றுமைக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கினார், இவருக்கு உத்வேக ஊற்றாக யார் விளங்கினார்கள் என்பதை நாமனைவரும் அறிவோம். பல ஆண்டுகளை சிறையில் கழிக்கக்கூடிய பொறுமையும் உத்வேகமும் வணக்கத்துக்குரிய அண்ணலிடமிருந்து தான் அவருக்குக் கிடைத்தன.

மண்டேலா அவர்கள் அண்ணலைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா? ”காந்தியடிகள் எங்கள் வரலாற்றின் பிரிக்கமுடியாத அங்கமாக விளங்கினார் எனென்றால் இங்கே தான் அவர் வாய்மையுடன் தனது முதல் பரிசோதனையை மேற்கொண்டார்; இங்கே தான் அவர் நீதியின் பொருட்டு தனது உறுதிப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தினார்; இங்கே தான் அவர் தனது சத்தியாகிரஹ தத்துவம் மற்றும் போராட்டத்தின் வழிமுறையை மலரச் செய்தார்”, என்றார். அவர் அண்ணலை தனது முன்மாதிரியாகவே அமைத்துக் கொண்டார். அண்ணலும், மண்டேலாவும் – உலகனைத்திற்கும் உத்வேகத்தின் ஊற்றாக விளங்கியதோடு, அவர்களின் இலட்சியங்கள் நம்மை அன்பு, கருணை நிறைந்த சமூகத்தை அமைக்க என்றுமே, எக்காலத்துமே உத்வேகம் அளித்துவரும்.

எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக குஜராத்தின் நர்மதைக் கரையின் கேவடியாவில், காவல்துறைத் தலைமை இயக்குனர்களின் மாநாடு நடந்தது, அங்கே நாட்டின் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளுடன் பொருளார்ந்த விவாதங்கள் நடைபெற்றன. நாடு மற்றும் நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கு மேலும் பலமளிக்கும் வகையிலே எந்த வகையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக விவாதங்கள் நடைபெற்றன. இந்த சந்தர்ப்பத்தில் நான் தேச ஒற்றுமைக்காக “சர்தார் படேல் விருது” என்ற ஒன்றைத் துவக்கி வைக்கும் அறிவிப்பைச் செய்தேன்.

தேச ஒற்றுமைக்காக தனது பங்களிப்பை எந்த வகையிலாவது செய்தவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படும். சர்தார் படேல் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதையும் தேசத்தின் ஒற்றுமைக்காகவே அர்ப்பணித்தார். அவர் என்றுமே பாரதத்தின் ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பதில் இணைந்திருந்தார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் தான் பாரத நாட்டின் சக்தி அடங்கியிருக்கிறது என்று சர்தார் படேல் அவர்கள் கருதினார். சர்தார் படேல் அவர்களின் இந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலே இந்த விருது மூலமாக நாம் அவருக்கு நம் தூய அஞ்சலிகளை அளிக்க முடியும்.

என் இனிய நாட்டுமக்களே, ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று குரு கோவிந்த் சிங் அவர்களின் புனிதமான பிறந்த நாள். குரு கோவிந்த் சிங் அவர்கள் பட்னாவில் பிறந்தார். வாழ்க்கையின் பெரும்பகுதி வரை அவரது செயற்களம் வட இந்தியாவாகவே இருந்தது, மஹாராஷ்ட்ரத்தின் நாந்தேடில் அவர் இறையடி சேர்ந்தார். பிறந்த இடம் பட்னா, செயற்களம் வடக்கு இந்தியா, வாழ்க்கையின் இறுதிக் கணங்கள் நாந்தேடில். ஒருவகையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே அவரது ஆசிகள் கிடைத்திருக்கின்றது என்றே கூறலாம். பாரத நாட்டு முழுமையான காட்சியை அவரது வாழ்க்கையில் நம்மால் பார்க்க முடிகிறது. தனது தந்தையாரான ஸ்ரீ குரு தேக் பஹாதுர் அவர்கள் உயிர்த்தியாகத்தின் பின்னால் குரு கோபிந்த் சிங் அவர்கள் மிகச் சிறிய வயதான 9 வயதிலேயே குரு என்ற நிலையை எய்தினார்.

நீதிக்காகப் போராடுவது என்ற தைரியம் குரு கோபிந்த் சிங் அவர்களுக்கு, சீக்கிய குருமார்களிடமிருந்து கிடைத்தது. அவர் அமைதி மற்றும் எளிமையான குணங்களின் கருவூலமாக விளங்கினார்; ஆனால் எப்போதெல்லாம் ஏழைகள், பலவீனமானவர்களின் குரல்கள் நசுக்கப்படும் முயற்சிகள் நடந்தனவோ, அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டதோ, அப்போதெல்லாம் குரு கோபிந்த் சிங் அவர்கள் ஏழைகள், பலவீனமானவர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தார், உறுதியோடு தோளோடு தோள் இணைந்து போராடினார், ஆகையால் தான் கூறுகிறார்கள் –

ஸவா லாக் ஸே ஏக் லடாஊம்,
சிடியோன் சோன் மைன் பாஜ் துடாஊம்,
தபே கோபிந்த்சிங் நாம கஹாஊம்.

“सवा लाख से एक लड़ाऊँ,
चिड़ियों सों मैं बाज तुड़ाऊँ,
तबे गोबिंदसिंह नाम कहाऊँ |

பலவீனவர்களோடு மோதி, தங்கள் சக்தியை வெளிப்படுத்த முடியாது என்று அவர் கூறுவார். மனித சமூகத்தின் துக்கங்களைத் துடைப்பது தான் மிகப்பெரிய சேவை என்று ஸ்ரீ குருகோபிந்த் சிங் அவர்கள் கருதினார். அவர் வீரம், சூரம், தியாகம், அறவழி நடத்தல் என்ற நற்குணங்கள் நிறைந்த மாமனிதராக விளங்கினார். அறம் – ஆயுதம் என்ற இரண்டு பற்றிய அற்புதமான ஞானம் அவரிடம் இருந்தது. அவர் ஒரு அருமையான வில்லாளி; இதுதவிர குருமுகீ, ப்ரஜ்பாஷா, சம்ஸ்க்ருதம், பாரசீகம், ஹிந்தி, உருது எனப் பல மொழிகளிலும் நிபுணராக இருந்தார். நான் மீண்டுமொரு முறை ஸ்ரீ குரு கோபிந்த் சிங் அவர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மனம் நிறை நாட்டுமக்களே, நாட்டிலே அதிகம் விவாதப்பொருளாகாத பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன; இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி தான் FSSAI. அதாவது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் வாயிலாகச் செய்யப்பட்டு வருகிறது. காந்தியடிகளின் 150ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தத் தொடரில் இந்த அமைப்பு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுக்கு ஊக்கமளிப்பதில் ஈடுபட்டு வருகிறது. Eat Right India, முறையான உணவை இந்தியா மேற்கொள்ளுதல் என்ற இயக்கம் வாயிலாக ஆரோக்கியமான-இந்தியா-யாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறும். சில வேளைகளில் அரசு அமைப்புகளின் அடையாளமாக நெறிப்படுத்தல் அமைகின்றது. ஆனால் FSSAI இதைத் தாண்டி, மக்கள் விழிப்புணர்வு, மக்களுக்குக் கல்வி என்ற முனைப்புகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.

பாரதம் எப்போது தூய்மை நிறைந்ததாக ஆகுமோ, ஆரோக்கியமானதாக ஆகுமோ, அப்போது தான் தன்னிறைவுடையதாக ஆகும். நல்ல உடல்நலத்திற்கு மிக முக்கியமான தேவை ஊட்டச்சத்து நிறைந்த உணவு. இந்த வேளையில், இப்படிப்பட்டதொரு முயற்சியை மேற்கொண்டமைக்கு FSSAI அமைப்பிற்கு நான் என் மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து நீங்களனைவரும் இந்த முனைப்போடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் இதில் இணைவதோடு, குழந்தைகளுக்கும் இவற்றைக் காட்டுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். உணவின் மகத்துவம் பற்றிய அறிவு சிறுவயதிலிருந்தே அவசியமானது.

எனதருமை நாட்டுமக்களே, 2018ஆம் ஆண்டின் நிறைவான நிகழ்ச்சி இது, 2019ஆம் ஆண்டிலே நாம் மீண்டும் இணைவோம், மீண்டும் மனதோடு மனம் உரையாடுவோம். தனிப்பட்ட வாழ்க்கை யானாலும், தேசத்தின் வாழ்க்கையானாலும், சமூகத்தின் வாழ்க்கை யானாலும், உத்வேகம் தான், வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றது.

வாருங்கள், புதிய உத்வேகம், புதிய உற்சாகம், புதிய மனவுறுதி, புதிய வெற்றிகள், புதிய சிகரங்கள் – முன்னேகுவோம், வெற்றிநடை போடுவோம், நாமும் மாற்றம் காண்போம், நாட்டிலும் மாற்றத்தை மலரச் செய்வோம். பலப்பல நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe