சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…
அன்புடையீர், சுவாமி சரணம்..!!
சபரிமலையின் ஆச்சார அனுஷ்டானங்கள் அத்தனையும் மாற்றியமைத்து அதன் புனிதத்துவதை சீர்குலைத்து, புகழுக்கு பெரும் களங்கம் ஏற்படுத்த ஹிந்து விரோத தீய சக்திகள் ஒருங்கிணைந்து முயற்சித்துக் கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.
அவர்களுக்கு உறுதுணையாக கேரளா கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஒரு படி மேலே நின்று, தமது அதிகாரத்தையும் காவல்துறையினையும் பயன்படுத்தி, நீதி மன்றங்களில் பச்சை பொய்யான சத்திய பிரமாணங்களையும், வாக்குறுதிகளையும் நல்கி பக்தர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக பத்திரிகை தர்மம் முற்றிலும் மறந்த பல பத்திரிகைகளும், டீவீ.,க்களும் இவர்களுடன், பாக்கெட்டை நிரப்பும் எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள்!
மாநில அமைச்சர்களிலிருந்து, இடதுசாரி எழுத்தாளர்கள், சினிமா துறையினர் மற்றும் ஆகிடிவிஸ்டு பெண்கள் என யார் யாரோ சபரிமலையை பற்றியும், அதன் சிறப்பினைப் பற்றியும், அங்கு நடைபெறும் பூஜைகளைப் பற்றியும், விக்கிரஹம் பிரதிஷ்டை செய்த தந்திரி குடும்பங்களைப் பற்றியும் வாய்க்கு வந்ததை பேசுகின்றார்கள். பலர் மீதும் நாம் வழக்கு தொடுத்திருக்கின்றோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும், என ஆரம்பத்தில் கூறி வந்தவர்கள், சபரிமலையை களங்கப்படுத்தி அதன் புகழைக் குலைப்பது தான் தங்களது மறைத்து வைக்கப்பட்ட அஜெண்டா என்பதை வெளிப்படையாக பேசிக் கொண்டிருக் கின்றார்கள்.
இத்தனையும் சகித்துக் கொண்டு, இதற்கு எதிராக நாடு முழுக்க, குறிப்பாக கேரளாவில் பக்தர்களும் பல்வேறு ஹிந்து இயக்கங்களும் ஒருங்கிணைந்து அமைதியான வழியில் போராடிக் கொண்டிருப்பதையும் நாம் அறிந்திருப்போம்.
சபரிமலை கோவில் கேரளா மாநிலத்தில் விளங்கினாலும், சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அது தம்முடையது எனக் கருதி போற்றி வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.
நம்மிடம் இருக்கின்ற ஒரே சக்தி என்பது, பக்தர்களின் கூட்டு பிரார்த்தனையும் உரத்த குரலில் உள்ள கண்டனக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தான் !! இந்த ஆயுதத்துடன் நாம் போராடி வருகின்றோம்… ஐயப்பன் அருளால் இறுதி வெற்றி தர்மம் இருக்கும் பக்கத்திற்கே வந்து சேரும் என்பது திண்ணம்.
எனினும், வரும் ஜனவரி 22 அன்று இது சம்பந்தமான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்விற்க்காக எடுத்துக் கொள்வதற்கு முந்தைய இரண்டு நாட்கள் – அதாவது ஜனவரி 20 ,21 – நாடு முழுக்க அதிகமான இடங்களில் பக்தர்களுடைய உரத்த குரல் எழும்ப வேண்டும் .. அது உச்ச நீதிமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் !
ஆகவே, அதன் அடிப்படையில் கேரளாவின் தலை நகரமான திருவனந்தபுரத்தில் ஒரு பிரம்மாண்ட ஐயப்ப பக்த சங்கமத்தை ஜனவரி 20 ஆம் தேதி நிகழ்த்த விருக்கின்றோம். சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில், பூஜ்ய.மாதா அம்ருதானந்தமயீ தேவி, பூஜ்ய.ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நடிகர் சுரேஷ் கோபி மற்றும் சமுதாயத்தில் சிறந்து விளங்குகின்ற முன்னணியிலுள்ள பல்வேறு தரப்பட்டவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
நமது மாநிலத்திலும் எல்லா மாவட்டங்களிலும் உள்ள முக்கியமான நகரங்களில் ஒரு ஆர்ப்பாட்டமோ, கண்டனக்கூட்டமோ, ஐயப்ப சங்கமமாகவோ ஒரு நிகழ்ச்சியினை நல்லமுறையில் நடத்த வேண்டும். வெறும் ஐந்து நாட்கள்தான் நமக்கு இனி உள்ளது.
ஆகவே, விரைந்து செயல்படுவீர்.. ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க, ஐயப்ப சேவா சமாஜம், மற்ற ஆன்மீக இயக்கங்கள், விவசாய இயக்கங்கள், ஜாதி சங்கங்கள் என எல்லாத் தரப்பு ஹிந்துக்களும் பக்தர்களும் இதில் பங்குபெறச் செய்வோம்.
நம்பிக்கையுள்ள மருத்துவர்களும், வக்கீல்களும், என்ஜினீர்களும் என அனைவரிடமும் பேசி ஒரு மணி நேரம் இந்த சபரிமலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூறுவோம். அங்கங்கு சோசியல் மீடியா மூலம், நமது பகுதி நிகழ்ச்சியை அனைவருக்கும் சென்றடையச் செய்யுங்கள்.. அத்தனை பேரும் பங்கெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வோம்.
இந்நிகழ்ச்சியில் பேசுபவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ற திரையை பயன்படுத்தி, திரைக்குப் பின் சபரிமலையை அழிக்கும் பொருட்டு செய்கின்ற கள்ளத்தனங்களை கோடிட்டுக் காட்ட வேண்டும்.
சுவாமி சரணம்., பணிவான வணக்கத்துடன்., ஈரோடு என் ராஜன், (தேசீயப் பொதுச் செயலாளர், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்)- என்று அந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.