புது தில்லி: வாழ்த்துவதற்கும் வரவேற்பதற்கும் சொல்லப் படும் அபிநந்தனம் என்ற வார்த்தையின் பொருளே மாறிவிட்டது, அவ்வாறு மாற்றக்கூடிய ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
தில்லியில் நடந்த ‘கட்டுமான தொழில்நுட்ப இந்தியா 2019’ என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை புகழ்ந்தார்.
இந்த விழாவில் பேசிய போது, இந்தியா என்ன செய்கிறது என்பதை உலகமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது. அகராதியில் உள்ள சொற்களின் பொருளை மாற்றும் ஆற்றலை இந்தியா பெற்றுள்ளது. வரவேற்பதற்காகவும் வாழ்த்துவதற்காகவும் பயன்பட்ட வார்த்தை, அபிநந்தனம் என்பது. தற்போது அபிநந்தன் என்ற பெயருக்கான அர்த்தமே மாறி உள்ளது.. என்று மோடி புகழ்ந்தார்.
மேலும், அத்தகைய ஆற்றல் வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்றும், தீரமிக்க நாடாக தன்னம்பிக்கையோடு நாம் முன்னேறிச் செல்வோம் என்றும் பலத்த கைதட்டல்களுக்கு இடையே பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாட்டின் இளைஞர்களுக்கு தேசப் பற்றின் உள்ளர்த்தத்தைச் சொல்லிக் கொடுத்த நாயகனாக உயர்ந்துள்ள, இந்திய விமானப் படையின் போர் விமானி அபிநந்தனை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியது பலரையும் ரசிகக் வைத்தது.
முன்னதாக நேற்று அபிநந்தன் நாடு திரும்பிய போது தனது டிவிட்டர் பதிவில் கருத்து பதிவிட்ட மோடி, அபிநந்தனின் அபரிமிதமான துணிச்சலால் நாடே பெருமை அடைவதாகவும், நமது ராணுவம் 130 கோடி இந்தியர்களுக்கு, முன்னுதாரணமாக திகழ்வதாகவும் தெரிவித்திருந்தார்.