பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் எழுத்துபூர்வ வாதம் இன்று கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை நீதிபதி குமாரசாமி கேட்டிருந்ததற்கு விளக்கம் அளிக்கும் வகையில், கூட்டுச் சதி எவ்வாறு நடைபெற்றது, அதில் ஈடுபட்ட நபர்கள் உள்ளிட்ட தகவல்களை எடுத்துக் கூறி எழுத்துபூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளதாக, வழக்குரைஞர் தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வ வாதத்தை 90 பக்கங்களுக்குள் நாளை ஏப்.28க்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றே 81 பக்கங்கள் கொண்ட எழுத்து பூர்வ வாதத்தை அன்பழகன் தரப்பு வழக்குரைஞர் பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

