வேலூர்: செம்மரம் கடத்தல் வழக்கில், கரகாட்டக்காரி மோகனாம்பாளை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய, ஆந்திர சிறப்புப் படை போலீஸார் வேலூரில் முகாமிட்டுள்ளனர். திருப்பதி வனப் பகுதியில், கடந்த 7ம் தேதி, ஆந்திர போலீஸார் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து ஆநதிர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களை, ஆந்திர போலீஸார் கைது செய்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட போலீஸார் நேற்று வேலூர் வந்து, மோகனாம்பாளை சித்தூர் அழைத்துச் சென்றனர். அங்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது செம்மரக் கடத்தலில் ஆந்திரா, தமிழகத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள், செம்மர பதுக்கல் இடங்கள். கடத்தலுக்கு பண உதவி செய்பவர்களின் விவரம், மரம் வெட்ட ஆட்களை அனுப்பும் முகவர்கள் உள்ளிட்ட பட்டியலைக் கொடுத்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து மோகனாம்பாளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

