இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட், ஐஎஸ் அமைப்பு, முதல் முறையாக இந்தியாவில் ஒரு பகுதியை தங்கள் பகுதி என விலாயத் ஆஃப் ஹிந்த் என குறிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நேற்று, ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான அமாக் நியூஸ் ஏஜென்ஸியில், (Amaq News Agency) ஐஎஸ் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், விலயாஹ் ஆஃப் ஹிந்த் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களுடைய மாகாணமாக ஐஎஸ் அறிவித்திருந்தது.
சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் இஷ்ஃபக் அகமது சோபி என்பவர் கொல்லப்பட்டதாக போலீஸாரின் அறிக்கையை சுட்டிக் காட்டி, ஐஎஸ் வெள்ளிக்கிழமை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இது போன்றுதான் தங்கள் பகுதி என்று குறிப்பிட்டு, உரிமை கோரி, அதனைத் தங்கள் தளமாகக் கொண்டு மேலும் மேலும் பயங்கரவாதச் செயல்களால் இஸ்லாமியரிலேயே இன்னொரு பிரிவினரையும் மற்ற மதத்தவர்கள் பலரையும் கொன்று குவித்தார்கள் ஐஎஸ் பயங்கரவாதிகள்.



