கள் எடுக்க பனை மரம் மீது ஏறிய தொழிலாளர் ஒருவர் பனை மரம் பாதியாக உடைந்து விழுந்ததில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. கள் எடுக்கும்போது பனைமரம் உடைந்து விழுந்து தொழிலாளி மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் ஜூன் 3ம் தேதி நேற்று மாலை பல இடங்களில் இடியோடு கூடிய பெரும் காற்றும் பெருமழையும் பெய்தது. அப்போது, யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் பலத்த காற்றின் காரணமாக பனை மரம் பாதியாக உடைந்து சாய்ந்து ஒரு தொழிலாளி மரணமடைந்தார்.
சிகம் சந்திரய்யா என்ற பனை ஏறும் தொழிலாளி பனை மரத்தின் மேலே ஏறி கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. சந்திரய்யா பனை மரத்தின் மேல் பகுதியில் தன் கால்களில் கட்டிக்கொண்டு, மரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தன் வேலையை செய்து கொண்டிருந்தார். 
அதே நேரம் பலத்த காற்றால், பன மரம் வேகமாக ஆடத் தொடங்கியது. எதிர்பாராத விதமாக, பனை மரம் பலத்த காற்றால் பாதியாக உடைந்து கீழே விழுந்தது. மரத்தின் மேல் பகுதியில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த சந்திரய்யாவும் மரத்தின் மேல் பகுதியினுடனே கீழே விழுந்தார்.
இதில், உடைந்த பாதி மரம் அவர் மீதே விழுந்ததால் அவரால் தப்பிக்க இயலவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் காட்சியைக் கண்டு உள்ளூர் மக்கள் பெரும் வருத்தம் அடைந்தனர்.


