அலிகாரில் சிறுமியை கொடூரமாகக் கொலை செய்த பாதகர்கள் குறித்து எந்த விவாதமும் நடத்தாமல் வேடிக்கை பார்க்கின்றன டிவி ஊடகங்கள் என்று கொதித்துப் போய் மீம்ஸ்களும் கருத்துகளும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப் படுகின்றன.
இதனிடையே, பத்தாயிரம் ரூபாய் கடன் தகராறில், 3 வயது பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பன்வாரிலால் சர்மா. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஜாகித் என்பவனுக்கும் இடையே, 10,000 ரூபாய் கடன் பெற்றதில் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், பன்வாரிலால் சர்மாவின் 3 வயது பெண் குழந்தையை ஜாகித்தும் அவனது கூட்டாளி அஸ்லம் என்பவனும் கடந்த மாதம் 30ஆம் தேதி கடத்திச் சென்று கொலை செய்தனர்.
குழந்தையைக் காணவில்லை என மே 31ல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து கடந்த 2ஆம் தேதி குழந்தையின் சடலம் கண்கள் தோண்டப்பட்டு கைகள் வெட்டுப்பட்டு அழுகிய நிலையில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக, ஜாகித் மற்றும் அஸ்லம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் புகாரை பெறுவதிலும் வழக்கு விசாரணையிலும் போலீசார் மெத்தனம் காட்டியதாக அலிகார் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீசார் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.