இந்தியர்கள் பயன்படுத்தும் உப்பில் விஷத்தன்மை கொண்ட வேதிப் பொருள் இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பையை தலைமையிடமாக கொண்ட கோதம் தானியம் மற்றும் விவசாயப் பொருட்கள் என்ற தனியார் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள வெஸ்ட் அனாலிட்டிகல் ஆய்வகத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் தரத்தை ஆய்வு செய்தது. இதன் முடிவுகளை அந்நிறுவனத்தின் தலைவர் சிவசங்கர் குப்தா வெளியிட்டார். இதில் அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உப்பில், உடல்நலனுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் பொட்டாசியம் ஃபெர்ரோசையனைட் என்ற அபாயகரமான வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஆய்வகத்தில் நடத்திய ஆய்வின் முடிவில் ஒரு தனியார் நிறுவன உப்பில் ஒரு கிலோவுக்கு 4.71 மில்லி கிராமும், இன்னொரு நிறுவன உப்பில் ஒரு கிலோவுக்கு 1.85 மில்லி கிராமும், அதேபோல் வேறொரு நிறுவன உப்பில் ஒரு கிலோவுக்கு 1.90 மில்லி கிராமும் பொட்டாசியம் ஃபெர்ரோசைனைட் இருப்பது தெரியவந்துள்ளது.
உப்பு அல்லது எந்தவொரு உணவுப் பொருளிலும் விஷத்தன்மையுடைய பொட்டாசியம் ஃபெர்ரோசையனைட் பயன்படுத்த உலகின் எந்தப் பகுதியிலும் அனுமதி கிடையாது என அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் உணவை பரிசோதிக்கும் எந்தவொரு ஆய்வகத்திலும், உப்பில் இருக்கும் சையனைட் அளவை கண்டுபிடிக்கும் அளவுக்கு போதிய வசதி இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனால் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்ட போது, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் உப்பு மாதிரிகளை அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் உள்ள அமெரிக்கன் பேஸ்ட் னலிட்டிக்கல் லேபரட்டரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தேன். அங்கே நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய நிறுவனங்களின் உப்பில் அபாயகரமான பொட்டாசியம் பெரோ சயனைடு அளவுக்கதிகமாக கலந்திருப்பது தெரியவந்துள்ளது!
அயோடின் கலந்த உப்பு உடலுக்கு நல்லது என்ற கருத்து தவறானது. இதை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்று புகார் தெரிவித்துள்ளார்!
இந்நிலையில், அவர் குறிப்பிட்டிருந்த உப்பு தயாரிக்கும் தனியார் நிறுவனம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், உப்பில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் பயன்படுத்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது! ஒரு கிலோ உப்பில் 14 மில்லி கிராம் பொட்டாசியம் குளோரைட் பயன்படுத்தலாம் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது! அதை நாங்கள் பின்பற்றுகிறோம்… என்று கூறியுள்ளது.
ஹாங்காங் அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உப்பு கட்டியாகாமல் இருக்க ரசாயனம் சேர்க்கப்படும்! அந்த வகையில் ஆன்டி-ஏஜிங் ஏஜென்டாக பொட்டாசியம் குளோரைடு உப்பு சேர்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
இந்த நிலையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியபோது, சிலர் ஆய்வு என்ற பெயரில் சுய விளம்பரத்துக்காக பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.
நாம் உணவு சமைக்க பயன்படுத்தும் உப்பில் அயோடின் வேதிப்பொருள் மட்டுமே கலந்து இருக்கும்! ஒரு சில நிறுவனங்கள் அயோடின் கலந்த உப்பை தயாரிக்கின்றன! மற்றபடி உப்பில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலந்து இருப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை!
உப்பு உள்ளிட்ட எந்த உணவுப் பொருள்களில் மாற்றமோ அல்லது கெடுதல் இருப்பதாகவோ சந்தேகம் இருந்தால் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்! உணவு மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்படும்! கலப்படம் செய்திருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…என்றார்.
சோத்துல உப்பு போட்டுதான் தின்னுறீங்களா என்று சிலர் கேள்வி கேட்க.. நீங்க பயன்படுத்தும் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா என்று டிவி., விளம்பரத்தில் மாடல்கள் கேட்க… நீங்க பயன்படுத்தும் உப்பில் அயோடின் இருக்கா என்று அரசாங்கம் கேட்க.. இன்று உப்பு ஒரு பிரச்னையாகவே உருவெடுத்திருக்கிறது! இதற்கும் ஒரு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமோ என்று அங்கலாய்க்கிறார்கள் பொதுமக்கள்!