சந்த்ரயான்-2 ஏவப்படுவதை நேரில் பார்க்க ஆசை உண்டா? எனில் இன்று நள்ளிரவே அதற்கு நீங்கள் பதிவு செய்தாக வேண்டும்.
நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ரூ. 603 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது சந்த்ரயான்-2 விண்கலம். இது ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்கு ஏவப் படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்த்ரயான்-2 விண்கலம் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரடியாகப் பார்க்க ஏற்பாடு செய்துள்ளது இஸ்ரோ!
இந்த நிகழ்வை நேரில் கண்டு களிக்க எண்ணுபவர்கள், ஜூலை 4ம்தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இணையதளமான www.shar.gov.in இல் முன்பதிவு செய்ய வேண்டும். இதில், இன்று நள்ளிரவுக்கு மேல் தான், முன்பதிவுக்கான பிரத்யேக இணைப்பு கொடுக்கப்படும்.
விண்கலம் ஏவப்படுவதைப் பார்க்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் அரங்கில் 5000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் 5000 பேர் முன்பதிவு செய்யலாம். முதலில் வருபவர்க்கே முன்னுரிமை. இந்த அரங்கு விண்கலம் ஏவப்படும் ஏவுதளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும்.
நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்காக சந்த்ரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டின் வழியாக ஏவப்படுகிறது.
சந்த்ரயான்-2 விண்கலத்தில் ஆர்ப்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த பகுதி 1.3 டன் எடை கொண்டது. விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.