
கரூர் அருகே தி.மு.க எம்.எல்.ஏ க்களை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. 3 செண்ட் நிலம் இலவசமாகக் கொடுப்பதாகக் கூறி ஆசை காட்டி வாக்குகளைப் பெற்ற செந்தில்பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆங்காங்கே 3 செண்ட் நிலம்? எங்கே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும், பதவி வகித்து
வருகிறார். அவர் அ.தி.மு.க வில் இருந்து அமமுக கட்சி மாறி, தற்போது தி.மு.க.,வில் இணைந்த உடனே தி.மு.க மாவட்ட பொறுப்பாளராக பதவியிலும் அமர்ந்துவிட்டார். இது தி.மு.க.,வினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது .
இந்த நிலையில், உடனே அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலிலும், செந்தில் பாலாஜிக்கே சீட்டு கிடைத்தது. இதனால் மேலும் அதிருப்தி அடைந்தனர் திமுக., பழந் தொண்டர்கள். இந்நிலையில் அனைவருக்கும் 3 செண்ட் நிலம் இலவசம் என்று அறிவித்த செந்தில் பாலாஜி, மாநிலத்தில்
இந்த 22 தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் தி.மு.க., எப்படியும் வெற்றி பெற்று விடும் என்றும், மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறி, அதற்காக மனம் போன போக்கில் இலவசங்களை தாராளமயமாக்கினார்.

திமுக., சொன்ன இலவச வாக்குறுதிகளில் ஆகப் பெரிய வாக்குறுதியாக, கரூர் பகுதி மக்களிடம், 3 செண்ட் நிலம் என்ற வாக்குறுதி திகழ்ந்தது. இதனை திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் வாயாலேயும் சொல்ல வைத்தார் செந்தில் பாலாஜி.
ஆனால் திமுக.,வினர் எதிர்பார்த்ததற்கு மாறாக, மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தது. மாநிலத்திலோ அதே எடப்பாடி பழனிச்சாமிதான். இந்நிலையில், 25 ஆயிரம் நபர்களுக்கு 3 செண்ட் நிலம் லட்சியம், 10 ஆயிரம் பேருக்கு நிச்சயம் என்று உறுதிமொழியை அள்ளிக் கொடுத்தார் செந்தில் பாலாஜி.

ஆனால் வாக்கு கேட்டு மட்டுமே அரவக்குறிச்சி வந்தவர், தி.மு.க வினரின் இல்லத் திருமணங்கள் மற்றும் விஷேசங்களுக்கு மட்டுமே சென்றவர், வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க வரவில்லை, அட நன்றி கூட சொல்லவில்லை என்று கோபத்தில் குமுறுகின்றனர்.
செந்தில் பாலாஜியின் பொய்களை நம்பி வாக்களித்துவிட்டோமே என்ற கோபம் ஒரு புறம் என்றால், 3 செண்ட் நிலம் எங்கே என்ற கோபமும் மறு புறம் கிளர்ந்தெழுந்துள்ளது. இந்நிலையில் இன்று, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கூர் பகுதியில் தமிழக அரசு ஏற்கனவே தூர் வாரும் திட்டத்தினை கையில் எடுத்த நிலையில், இன்று அதே பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் ஏரி தூர்வாருவதாக கூறி தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், திருவரம்பூர் தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வும், கரூர் மாவட்ட தி.மு.க செயலாளருமான செந்தில் பாலாஜி ஆகியோர் சென்றனர்.

அப்போது வழிநெடுகிலும் செந்தில் பாலாஜி, மகேஷ் பொய்யாமொழி ஆகிய எம்.எல்.ஏ க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 3 செண்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி, எங்கே 3 செண்ட் நிலம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முற்றுகையிட முயன்றனர்!
இந்தச் சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதனையடுத்து காவல்துறையினர் உதவியுடன் அந்தப் பகுதியிலிருந்து தி.மு.க எம்.எல்.ஏ க்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பாதுகாப்புடன் வெளியேறினர்.



