
திருக்குறளையும் திருவள்ளுவரையும் காப்பதற்கு நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்று இந்து மக்கள் கட்சி நிறுவுனர் அர்ஜுன்சம்பத் அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
திருவள்ளுவர் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், தங்களது கருத்தைத் தெரிவிக்கு வகையிலும், அர்ஜுன் சம்பத் இன்று வெளியிட்ட அறிக்கையில்….
திருக்குறளுக்கு காவிச்சாயம் பூச இந்து இயக்கங்கள் முயற்சிக்கின்றன என்ற குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் ..
அவரோடு கூட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திருவள்ளுவர் நெற்றியில் திருநீறு பூசப்படுகிறது இது திருவள்ளுவரை அவமதிப்பது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
திருக்குறள் ஒரு மதச்சார்பற்ற நூல்! திருக்குறள் இந்து சமய நூல் அல்ல; இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் திருக்குறளை இந்து சமய நூலாக திரித்து சொல்லுகின்றார்கள்… என்கிற குற்றச்சாட்டு எங்கள் மீது சுமத்தப்படுகிறது!
திருக்குறள் அப்பழுக்கற்ற ஒரு இந்து சமய நூலாகும்! கடவுள் வாழ்த்துடன் துவங்குகிற திருக்குறள் மறுஜென்மம் நம்பிக்கை, வினைப்பயன், புலால் உண்ணாமை, கள் உண்ணாமை, ஒருவனுக்கு ஒருத்தி, கற்புநெறி உள்ளிட்ட பல இந்து சமய நம்பிக்கைகளை வலியுறுத்துகின்றது.
திருக்குறள் தோன்றிய காலத்தில் இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட எந்த மதங்களும் தோன்றவில்லை. இந்து சமயம் மட்டுமே இருந்தது. இந்து சமயத்திற்கு கூட இந்து மதம் என்று பெயர் வைக்கப்படவில்லை! இந்து சமயம் என்பது ஒரு மதம் அல்ல!
ஒரு கடவுள், ஒரு புத்தகம், அதை நம்பாவிட்டால் நரகம், மற்றவர்களை மதம் மாற்றி அவர்களை தங்களுடைய நம்பிக்கைக்கு கீழே கொண்டுவர வேண்டும் என்பது இஸ்லாம் கிறிஸ்தவம் பௌத்தம் உள்ளிட்ட மதங்களின் கோட்பாடு ஆகும். ஆனால் இந்து சமயம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.
இந்து சமயத்தின் ஆன்மீகத்திற்கு சாதி சமய பேதம் கிடையாது! மற்றவர்களெல்லாம் மதம் என்று பெயர் வைத்துக் கொண்ட காரணத்தினால் நாம் அந்தப் பெயரை கலாச்சாரம் தேசியத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்!
கடந்த பல வருடங்களாகவே கிறிஸ்தவ பாதிரிமார்கள் திருக்குறளை ஒரு கிறிஸ்துவ நூலாக மாற்றிட முயற்சி செய்து வருகின்றார்கள்! திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் கிறிஸ்தவ வெள்ளைய ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களுக்கு துணை போய் தமிழை தமிழ் மொழியை தமிழர் பண்பாட்டை திருக்குறளை கிறிஸ்தவ மயமாக மாற்ற முயற்சித்து வருகின்றது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பொழுதும் திருக்குறளை ஒப்புக் கொண்டது கிடையாது! திராவிடர் கழக நிறுவனர் ஈவேரா., திருக்குறளை தங்கத்தட்டில் வைக்கப்பட்டு இருக்கின்ற மலம் என்று குறிப்பிடுகிறார்!
திருக்குறளில் இருக்கக்கூடிய புலால் உண்ணாமை, கள் உண்ணாமை, கற்பு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது…
இஸ்லாமிய மத எழுத்தாளர் மதனி என்பவர் எழுதிய, ”உலகப் பொதுமறையான திருக்குறளை ஏற்றுக்கொள்ள முடியாது குர்ஆன் தான் உலகப்பொதுமறை” என்று சொல்லும் புத்தகத்திற்கு கருணாநிதி அன்பழகன் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னுரை எழுதி வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.
எனவே திருக்குறள் என்பது இந்து சமய நூல் தான் என்பதற்கு கவியரசு கண்ணதாசன், ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோர் பல சான்றுகளுடன் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார்கள்!
இந்து மக்கள் கட்சி வள்ளுவம் கண்ட ஹிந்துத்துவம் என்கின்ற அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது! செயின்ட் ஜார்ஜ் கோட்டையை வள்ளுவன் கோட்டையாக மாற்றுவோம் என்று ஆன்மீக அரசியல் மாநாட்டை நடத்துகிறது.
திராவிட முன்னேற்ற கழகம் திட்டமிட்டு இந்து சமய நூலாக திருக்குறள் திகழ்வதை தடுப்பதற்கு சதி செய்கின்றது! குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எங்கு சென்றாலும் திருக்குறள் பெருமை பேசுவது திராவிட இயக்கத்தினுடைய முகமூடியை கிழிப்பது போல இருக்கிறது! எனவே வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தங்களுடைய ஊடக பலத்தால் திருக்குறள் வேறு இந்து சமயம் வேறு என பிரிக்க நினைப்பது முட்டாள்தனமாகும்!
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். ஐயா எஸ் எஸ் வாசன், அவ்வையார் என்கிற படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து திருக்குறள் திருவள்ளுவர் எப்படி இருந்தார்கள் என்பதற்கு உதாரணமாக அந்தப் படத்தினுடைய காட்சி அமைப்பை அமைத்திருக்கிறார்!
வேங்கட சர்மா என்பவரால் திருவள்ளுவருடைய ஓவியம் வரையப்பட்டு அதன் பின்னர் திராவிட இயக்கத்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! ஆனால், திராவிட இயக்கத்தவர்கள் வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு திருவள்ளுவர் சிலையில் திருநீறு இல்லாமலும் ருத்ராட்சம் இல்லாமலும் அவர்கள் அந்த சிலைகளையும் படத்தையும் வெளியிட்டு திருவள்ளுவரை ஒரு நாத்திகர் போல சித்திரிக்கிறார்கள்! இது வன்மையாக கண்டிக்கத்தக்கது!
குறிப்பாக திருவள்ளுவருக்கு திருநீறு பூசி இதுகுறித்து அவமானம் என்று சொல்கின்ற கம்யூனிஸ்டுகளை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது!
திருநீறு தமிழரின் அடையாளம்! நீறில்லா நெற்றி பாழ் என்று சொல்கிறார் அவ்வையார்! எனவே திருநீற்றையும் திருக்குறளையும் திமுக தொடர்ந்து அவமானப்படுத்தி கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் துணைபோய் திருக்குறளை ஒழித்துக் கட்ட தொடர்ந்து திமுக முயற்சிக்கிறது!
திருக்குறளை காப்பாற்றிட இந்து மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும்! – என்று தெரிவித்துள்ளார் அர்ஜுன் சம்பத்!



