
ஆர்எஸ்எஸ்ஸின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் இன்று மாலை 6 மணி அளவில் உரை நிகழ்த்தினார். சமூக ஊடகங்கள் வழியே மட்டுமின்றி, முக்கிய ஊடகங்களிலும் அவரது உரை ஒளிபரப்பப் பட்டது.’
தனது உரையின் போது, ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறையில் பின்பற்றவும், அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அக்ஷய திருதியை நன்னாளில் தற்போதைய நிலைமையில் நமது பங்கு என்பது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் ஆன்லைனில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், கொரோனா பரவலை தடுக்க, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கொரோன பரவல் தடுக்கப்பட்டுள்ளது, அதற்காக, அரசை பாராட்டுகிறேன் என்றார்.

தொடர்ந்து கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் வாழ்க்கை வழக்கம் போல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் நாம் நல்லவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்! நம்மைச்சுற்றியுள்ள உலகத்தையும் சிறந்ததாக்க உலக நாடுகளுக்கும் உதவவேண்டும்.
மிகவும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவ அனைவரும் உழைக்க வேண்டும் . நெருக்கடியான இந்த நேரத்தில் நாம் நாட்டிற்காக உழைக்க வேண்டும் . நாடு முழுவதும் கொரோனா பாதித்த பகுதிகளில் 55 ஆயிரம் இடங்களில் ஆர்.எஸ். எஸ்.தொண்டர்கள் சேவைப் பணி ஆற்றி வருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் 2 கோடி மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி இருக்கிறோம்… என்றார்.
அவரது உரையில் முக்கிய அம்சங்கள் சில வெளிப்பட்டன. குறிப்பாக, மகாராஷ்டிரம் மாநிலம் பால்கரில் சாதுக்கள் இருவர் உள்பட மூவர் அங்குள்ள மக்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருந்த நேரத்தில், மகாராஷ்டிர மாநில அரசின் நடவடிக்கைகள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன
மேலும், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் மக்களுக்கான உதவிகள் ஆர்.எஸ் எஸ் அமைப்பால் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், அவரது கருத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவரது உரையில், நமது சேவை முழு சமுதாயத்தின் வளர்ச்சியை நோக்கியே அமைந்திருக்கிறது. சமுதாயப் பணி செய்வதன் மூலம் நமது அகங்காரம் குறைகிறது. பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பு விதிமுறைகளை முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்து, குடும்ப ரீதியான உணர்வுகளை மதிப்போம் என்றும், நல்ல பண்பாடு மிக்க குடும்ப சூழ்நிலையை உருவாக்குவோம் என்றும் அமைப்பின் வழமையான கொள்கையை மீண்டும் நினைவுறுத்தினார்.
பொருளாதார மேம்பாட்டிற்காக ஆக்கபூர்வமாக பணியாற்றுவோம் என்றும், சுய சார்பு பொருளாதாரம் என்ற வகையில், சுதேசி உற்பத்தியை அதிகப் படுத்தி
சுதேசிப் பொருட்களையே வாங்குவோம். இதன்மூலம் நமது நாடு சொந்தக்காலில் நிற்க முடியும் என்றும் அவர் தனது உரையில் அறிவுறுத்தினார்.
கொரோனா பரவி வரும் நிலையில், சுற்றுப்புற சூழலுக்கு கவனமும் முக்கியத்துவமும் ,எல்லாத் துறையிலும் கொடுப்போம் என்றார்.
மகாராஷ்டிரா பால்கரில், துறவிகளை தாக்கிய சம்பவம் அனைவரது மனதிலும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய அவர், இது தொடர்பாக துறவியர் சபையினர் எடுக்கும் முடிவை நாம் ஏற்போம் என்று குறிப்பிட்டார்.
வழக்கமாக ஆர்.எஸ். எஸ்., ஸ்வயம்சேவகர்கள் ஷாகாக்களில் கலந்து கொண்டு உடற்பயிற்சிகள் மனப்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் தற்போதைய கொரோனா சூழலில், அனைவரும் தங்கள் இடங்களில் இருந்து கொண்டே இவற்றை மேற்கொள்ளலாம் என்றார்.


