
மதுரை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு விரைந்து செயல்படுவதால் தான் நோய் கட்டுக்குள் உள்ளதாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த வந்துள்ள கை தெளிப்பானை மக்கள் பயன்பாட்டுக்கு அவர், வியாழக்கிழமை காலை தொடங்கி வைத்து பேசியதாவது…
தமிழக அரசும், சுகாதாரத் துறையும் மக்களை பாதுகாக்கின்ற வகையில் செயல்பட்டு வருகிறது. அமைச்சர்களை, மக்கள் தேடிச் சென்று பார்த்த காலங்கள் போய், மக்களை அமைச்சர்கள் நேரடியாக சந்திக்கின்ற நிலை அதிமுக ஆட்சியில் தான்.

என்னதான் திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், அத் திட்டமானது சிறப்பாக செயல்படுவதற்கு பொது மக்கள் பங்களிப்பு அவசியம். மதுரை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் மூலம் பாசனக் கண்மாய்கள், மதகுகள், கால்வாய்கள் சீரமைக்கும் பணியானது முழூ வீச்சில் செயல்பட்டு வருகிறது என்றார்.
முன்னதாக, அமைச்சர் உதயக்குமார் பிரதமர் கொரோனா நிவாரணத் திட்டத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கிய மாணவியை பாராட்டினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிதழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை


