கேள்விக்குறியான நிலையில் திருச்சி -செங்கல்பட்டு ரயில் சேவை இப்போது நடந்து வருகிறது. இபாஸ் பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள், கொரோனா குறித்த அச்சம், பயணியரிடையேயான சோதனைகள் என பல்வேறு அம்சங்கள் இப்போது திருச்சி செங்கல்பட்டு இடையிலான சிறப்பு ரயில் தொடர்ந்து இயங்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல், தினமும் சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி சோழன் எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கும் திருச்சியிலிருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படுகின்றன.
இந்த இரு ரயில்களிலும் 14 மற்றும் 16 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.
மற்ற பெட்டிகள் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பயணிகள் முகக் கவசம் அணியவும், உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு தனி நபர் இடைவெளியுடன் அமரவும் அறிவுறுத்தப்படுகின்றனர். இருப்பினும், பெரும்பாலானோர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்று கூறப் படுகிறது.
ரயில்களில் பயணம் செய்ய முன்னதாக மண்டலம் விட்டு மண்டலம் செல்லக் கூடிய வகையில் இபாஸ் வாங்க வேண்டும், ரயிலில் முன்பதிவு செய்ய வேண்டும், கொரோனா தொற்று குறித்த அச்சம் என பல காரணிகள் இந்த ரயில்களுக்கு பயணிகளின் வரவேற்பின்மைக்குக் காரணமாகக் கூறப் படுகிறது.