மதுரை: ஊரடங்கு உத்தரவை மீறி மதுரை நகரில் பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுகிறார்கள். ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும் என மக்கள் அலை மோதி வருகின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
இப்படி இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலான காரியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரானா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மதுரைமாவட்ட செய்தியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மாத்திரைகளை வழங்கினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆர்.பி உதயகுமார், கொரானா வைரஸை தடுப்பதற்காக தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை மாவட்டத்தில் 7 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கபட்டு வருகிறார்கள். நோய் தொற்று ஏற்படக்கூடிய நபர்களை அடையாளம் கண்டு மருத்துவ பரிசோதனை செய்து,நோய் தொற்று உள்ளவர்கள் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சிங்க் விட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணங்கள் பொதுமக்களுக்கு,வயதான முதியவர்கள் குடிசைமாற்று பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் அதிகமான கூட்டம் கூடுகிறார்கள். மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூடிய கடைகள் காய்கறி மார்க்கெட்டில் இறைச்சி கடைகள் இயங்கும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் மக்கள் ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும் என அலை மோதி வருகின்றனர்.
மதுரையில் இது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.மதுரை மக்கள் கொரானா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்த்து அச்சப்படத் தேவையில்லை. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரை நாம் காப்பாற்றி இருக்கிறோம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பலவிதமான நோய்கள் இருப்பவர்களுக்கு இந்த நோய் தொற்று அதிகமாக பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரையில் 600க்கும் மேற்பட்டவர்கள் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்புவது தான் நமக்கு நம்பிக்கை தரக் கூடியதாக உள்ளது. தற்போது பொது சுகாதார அவசர பிரகடனம் நடைமுறையில் இருந்து வருகிறது இதை நாம் நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், பெரியபுலான், நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை