சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப் பட்டதால் கோவிட் 19 என்று பெயரிடப் பட்ட வைரஸ், பின்னர் உலக நாடுகளுக்கு பெரிய அளவில் பரவியது. ஆனால் சீனாவோ, வூஹான் நகரில் இருந்து மற்ற நகரங்களுக்கு தன் நாட்டில் வைரஸ் பரவாமல் பார்த்துக் கொண்டது. மேலும், உலக நாடுகளுக்கும் வைரஸ் குறித்த தகவல்களை கொண்டு சேர்க்காமல், மூடி மறைத்தது. இதனால் வைரஸ் தோற்றுவிக்கப் பட்ட சீனாவில் பெரிய அளவில் பரவாத வைரஸ், உலக நாடுகளில் பெருமளவில் பரவி உயிரிழப்புகளையும், பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தி வருகிறது.
சீன வைரஸின் தாக்குதல் மையங்களாக, அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகியவை இனம் காணப் பட்டுள்ளன. உலக அளவில் உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. கொரோனாவின் கோரதாண்டவம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் குறிப்பாக தில்லியில் இருந்து பரவிய வைரஸ் மும்பையையும் சென்னையையும் பெரிதாகத் தாக்கியது. மகாராஷ்டிரம், குறிப்பாக மும்பை முதலிடத்திலும், தமிழகம், குறிப்பாக சென்னை இரண்டாமிடத்திலும் இருக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 85 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதனால், சென்னையில் கட்டடங்கள் கட்டும் பணி, ஹோட்டல்கள், விடுதிகள், அழகு நிலையங்கள் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சிறப்பு ரயில்கள் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்று விட்டனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் சென்னையின் பல இடங்களில் பரவலாக குடியமர்ந்திருந்தனர். அது போல், சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவரும், கொரோனா பரவலால் அச்சம் கொண்டு, உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் பிழைப்புக்கும் வழி இல்லாததால், சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். சென்னை புறநகரில் பரவலாக முளைத்திருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் பலவற்றில் வடமாநிலத்தில் இருந்து வந்திருந்த மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தங்கள் இருப்பிடங்களை காலி செய்துகொண்டு அல்லது வீடுகளை பூட்டி வைத்துவிட்டு வடமாநில மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர் .
இது போல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக மதுரைக்கு தென்புறம் உள்ள தென் மாவட்டங்களில் இருந்து குடியேறி சென்னையில் வீடுகளை வாடகைக்கு பிடித்து தங்கி வேலை பார்த்து வந்தவர்கள் பலர். அவர்கள் பலர் தினசரி தங்கள் சொந்த ஊரை தேடி சென்று கொண்டு இருக்கின்றனர்.
தென்மாவட்ட மக்களில் பலர் வாடகை மற்றும் ஒத்தி வீடுகளில் இருந்து தங்களது கட்டில், பீரோக்கள், மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு லாரிகள் மூலமாக சொந்த ஊரை நோக்கி பயணம் செய்து வருகின்றனர். இதனால் சென்னை நகரில் பல வீடுகள் இப்போது காலியாகி வருகின்றன. அபார்ட்மெண்ட்களில் ஏற்கெனவே பல விற்கப் பட முடியாத சூழலில் இருந்த போது, குரோனா வேறு நிலைமையை மேலும் மோசமாக்கும் இருக்கிறது சென்னையில் தங்கியிருப்பதை உயிருக்கு ஆபத்தான விஷயம் என்று உணர்ந்து கொண்டு அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் வெளியேறியவர்கள் இப்போது அந்த இடங்களிலும் பரவல் அதிகரித்து வருகிறது .
தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் தேவை என்ற சூழ்நிலை நிலவுகிறது எனவே ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர். எனினும் ‘இ-பாஸ்’ பெற முடியாமல் பலர் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்டம் விட்டு மாவட்டங்கள் செல்ல ‘இ-பாஸ்’ தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டால், சொந்த ஊர் நோக்கி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இப்படி பலரும் சொந்த ஊர்களை நோக்கி பயணம் செய்வதால், அவர்கள் குடியிருந்த வீடுகள் தற்போது காலியாகக் கிடக்கின்றன. இந்த வீடுகளின் முன் ‘டூ-லெட்’ (வாடகைக்கு) என்று எழுதப் பட்ட அட்டைகள் தொங்கிய படி உள்ளன. சென்னையில் குடியிருப்பதற்கு வீடு கிடைப்பதே குதிரைக் கொம்பு என்ற அளவில் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது காணும் இடமெல்லாம் வாடகைக்கு என்ற அட்டைகள் தொங்குவது சென்னையின் நிலையை எடுத்துக் காட்டுகிறது என்னதான் இப்படி அட்டைகள் வைத்திருந்தாலும் இப்போது வீடுகளில் குடியேற எவரும் வருவதில்லை என்று வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்!