பிசினஸ் ஆன இ-பாஸ்! புகார் அளிக்க வலியுறுத்தல்!

Published:

e pass 1 - 2026

இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வரும் நிலையில் அதுபற்றிய விவரங்களை போலீசாருக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதால் மாவட்டத்தை விட்டு மாவட்டம் தாண்டக் கூட இ-பாஸ் வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளது. நியாயமான கோரிக்கைகளுக்கு விண்ணப்பித்தால் கூட அனுமதி கிடைப்பது கடினமாக உள்ளது. அப்படியே அனுமதி கிடைத்தாலும் இரண்டு, மூன்று நாட்கள் தாமதமாகவே அனுமதி கிடைக்கிறது.

உடல் நலம் குறைவு காரணமாக சிகிச்சை எடுக்க செல்ல வேண்டும் என்று ஆவணங்களுடன் இ-பாஸ் விண்ணப்பித்த பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நோயாளியுடன் அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக பல செய்திகள் வெளியாகி விட்டன. அதன் பிறகுதான் இ-பாஸை சில ஊழியர்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

நியாயமான முறையில் விண்ணப்பித்தாலும், நியாயமான காரணங்கள் இருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் நிலையில் பலரும் பணம் கொடுத்து இ-பாஸ் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். புதிய பிசினஸ் ஆகவே இ-பாஸ் மாறிவிட்டது.

tn-epass

இதற்கு ஒவ்வொரு இடத்திலும் ப்ரோக்கர்கள் வேறு வந்துவிட்டார்கள். அவசர நிலை, ஆட்களைப் பொருத்து ரூ.5000ம் வரை இதற்கு பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சொந்த ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்று நினைக்கும் பலரும் பணம் கொடுத்து வாங்கிச் சென்று விடுகின்றனர்.

இந்த நிலையில் இ-பாஸ் வாங்க யாராவது பணம் கேட்டால் அது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி தமிழ்நாடு போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது. 100 என்ற அவசர போலீஸ் எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img