உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய 4வது மற்றும் கடைசி கால் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியுடன் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதுகின்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்து களம் இறங்கியது. நியூசிலாந்து அணியில் துவக்க வீரர் மெகலம் 12 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். விலியம்சன் 33 ரன்னில் ரசல் பந்திலும், டெய்லர் 42 ரன்னுக்கு ரன் அவுட் ஆகியும் ஆட்டம் இழந்தனர். ஆண்டர்சன் 15 ரன்னும் எலியோட் 27 ரன்னும் எடுத்தனர். ரோன்ச் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால், துவக்க வீரராகக் களம் இறங்கிய குப்டில் அதிரடி காட்டி ஆடினார். அவர் இன்று தனது ஒருநாள் போட்டிகளில் அதிக பட்ச ரன்னைக் குவித்தார். 237 ரன் குவித்து அதிகபட்ச ரன்னை எடுத்து சாதனை படைத்தார். அவர் 163 பந்துகள் எதிர்கொண்டு, 11 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 237 ரன் குவித்தார். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரித்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 393 ரன் என்ற இமாலய இலக்கை அடைந்தது. இருப்பினும், குப்டில் நியூஸிலாந்துக்கு 400 ரன் என்ற அளவைக் கடக்கச் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், குப்டில் அடித்த 237 ரன் இரண்டாவது அதிகபட்ச ரன். உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில்,இதுவே அதிகபட்ச ரன் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதை அடுத்து, 394 ரன் என்ற வெற்றி இலக்கை மேற்கு இந்தியத் தீவுகளுக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.
393 ரன் குவித்து நியூசிலாந்து அணி அபாரம்
Popular Categories


