மீத்தேன் திட்டத்திற்கு முழுமையாக மூடுவிழா நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்

Published:

சென்னை: மீத்தேன் திட்டத்துக்கு முழுமையாக மூடுவிழா நடத்தப் பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீத்தேன் எரிவாயுத் திட்டம் குறித்த வினாவுக்கு விடையளித்த பெட்ரோலியஅமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அதற்கான நிபந்தனையை நிறைவேற்றாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். காவிரி பாசன விவசாயிகளுக்கு ஓரளவு நிம்மதியளிக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை சில தொழில்நுட்ப குறைபாடுகளின் அடிப்படையில் தான் மத்திய அரசு ரத்து செய்யவுள்ளது என்பதும், மீத்தேன் திட்டத்தை கைவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் நிபந்தனைகளை நிறைவேற்றும் சக்தி கொண்ட வேறு நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்தால், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, மத்திய அரசின் அறிவிப்பு தானாக கிடைத்த தற்காலிக நிம்மதி தானே தவிர, டெல்டா விவசாயிகளை அச்சுறுத்தும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு அல்ல. இந்தத் தீர்வு கூட மத்திய அரசால் கிடைத்தது அல்ல; மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்த்தை பெற்ற கிரேட் ஈஸ்ட்ரன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்து திட்டத்தைத் தொடங்காமல் பின்வாங்கி ஓடியதால் கிடைத்தது ஆகும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி மீத்தேன் எரிவாயு திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இத்திட்டம் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கும் என்பது உறுதி. மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் 21 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படும். 667 கி.மீ. பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை அனைத்து ஊடகங்களிலும் விளம்பரமாக வெளியிட்டு மக்கள் மனதில் நிலவும் அச்சத்தை போக்க வேண்டும்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img