அமித்ஷா தமிழக வருகை! ஜெயக்குமார் சொல்வது உண்மையா? இதில் ஏன் அதிமுக அரசியல் செய்கிறது?

Published:

amit sha
amit sha

வரும் 21ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை குறித்து இப்போதே தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு உற்சாகமளிக்கும், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றெல்லாம் பாஜகவினர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதைத்தான் தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். 

இந்த நிலையில் அமித்ஷாவின் வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கருத்து தெரிவித்துள்ள தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.க வை பலப்படுத்தவே அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

 அமித்ஷா ஒரு கட்சியின் தலைவராக அல்ல, மத்திய உள்துறை அமைச்சராகவும் உள்ள ஒருவர். அவர் பாஜகவை பலப்படுத்த மட்டுமே தமிழகத்திற்கு வருகை தருகிறார் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து ஒரு அமைச்சருக்கு உண்டான பொறுப்பில் இருந்து விலகி அதிமுக என்ற கட்சி சார்ந்த நபராகவே கருத்து தெரிவித்து அரசியல் செய்திருக்கிறார் ஜெயக்குமார்.

உண்மையில் தமிழகத்துக்கு மக்கள் நலத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகிறார் அமித்ஷா. வரும் நவம்பர் 21 ஆம் தேதி வரும் அவர், சென்னைக்கான 5 வது நீர்த்தேக்க திட்டத்தை திறந்து வைக்கவுள்ளார். மேலும் 3 திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டவுள்ளார். 

amitsha
amitsha

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம், கோயம்புத்தூர்-அவினாசி உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை திட்டம், மற்றும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் உள்ளிட்ட மூன்று திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் நவம்பர் 21 ஆம் தேதி  அடிக்கல் நாட்டுகிறார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அமித் ஷாவின் பயணத் திட்டம் குறித்த உறுதிப் படுத்தல், திங்கள்கிழமை மாலை மாநில அரசுக்குக் கிடைத்துள்ளது. கோவிட் -19 க்கான தனிநபர் இடைவெளி பராமரிப்பு விதிமுறைகளை உள்ளடக்கி, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மாநில அரசாங்கம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. கட்டாய கொரோனா பரிசோதனைகளுக்குப் பின்னர்தான் அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள்  அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள். 

இதனோடு, அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கட்சியினருடன் விவாதிக்கவும் இந்த பயணத்திட்டத்தில் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.  

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை மற்றும்  நெடுஞ்சாலைத் திட்டங்களைத் திறந்து வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.  கடந்த 2012 ஆம் ஆண்டில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை சென்னையின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் ஐந்தாவது பெரிய நீர்த்தேக்கமாக உருவாக்கப் படும் என அறிவித்தார். இந்தத் திட்டம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகளால், பெரும் தேக்கம் அடைந்தது.   இது கண்டலேரு-பூண்டி கால்வாயிலிருந்து திருப்பி விடப்பட்ட  ஒரு டிஎம்சி  தண்ணீரை சேமிக்க உதவும்! 

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அதேபோல், மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டும் நிலையில், மாநில அரசு, இந்தத் திட்டத்துக்கு மத்திய நிதி உதவியைப் பெறுகிறது . “அமித்ஷா இரண்டாம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார். 

amithsha hbd
amithsha hbd

ரூ .61,842 கோடி திட்டத்திற்கு பெரும்பாலும் பலதரப்பு வங்கிகளான JICA, ADB, NDB and AIIB ஆகியவை நிதி அளித்துள்ளன. இந்த இரண்டாம் கட்டத்தின் மூன்று காரிடர்கள், மாதவரம் மற்றும் சிப்காட், சிறுசேரி, கலங்கரை விளக்கம் மற்றும் பூந்தமல்லி ,  மாதவரம் மற்றும் சோளிங்கநல்லூர்  ஆகிய பகுதிகளை இணைக்கும். 

அடுத்து மூன்றாவது திட்டமான, கோயம்புத்தூர்-அவினாசி உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை, 10 கி.மீ நீளமுள்ள கட்டமைப்பைக் கொண்டது. இதற்கான முயற்சிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை இறுதி செய்தது. “இது மாநிலத்தின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலையாக இருக்கும். மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நத்தம் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைக்கு அடுத்ததாக இது இருக்கும். 1,621 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த திட்டத்தில் ரூ. 300 கோடி நிலம் கையகப்படுத்தலுக்கு செல்கிறது” என்கின்றனர் அதிகாரிகள். 

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஆனால் தேசிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், அதுவும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் தமிழகத்திற்கு அந்த கட்சியின் வளர்ச்சிக்காகவே மாநிலத்துக்கு வருகிறார் என்பது போன்ற நாலாந்தர அரசியல் மாயத்தோற்றத்தை ஜெயக்குமார் போன்றவர்கள் ஏற்படுத்த முனைந்திருக்கிறார்கள்.!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img