
தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துள்ளனர் என்று மதுரை விமான நிலையத்தில் பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மேலும், வேளாண் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெருவதற்கு இடமில்லை; இருப்பினும் திருத்தங்கள் செய்ய வாய்ப்புகள் இருக்கலாம் என்று, இல.கணேசன் கூறினார்.
திருச்செந்தூரில் நிறைவுபெறும் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோர் மதுரை விமான நிலையம் வந்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக மூத்த தலைவர் இல கணேசன்!
முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியை ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் புதிய கட்சியில் சேர்த்தது பாஜகவின் சூழ்ச்சி என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு அர்ஜுன மூர்த்தி புதிதாக பாஜகவில் இணைந்தவர் அவருக்கு ஒரு பொறுப்பு தந்திருந்தோம் அவர் தற்போது ரஜினிகாந்திடம் சேர்ந்து இருக்கிறார். அதனால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை…. என்றார்.
ஜனவரியில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்த துணை முதல்வர் பேச்சு குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிப்பார்கள் நானும் தெரிவித்து கொள்கிறேன்! ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பதாக கூறுகிறார். குழந்தை பிறந்த பிறகுதான் என்ன பெயர் வைக்க என யோசிக்கனும்… என்றார்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் பாஜகவிற்கு பாதகமா என்ற கேள்விக்கு யார் எந்த கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவிற்கு பாதகம் கிடையாது, மோடியின் நல் ஆட்சி மீது நம்பிக்கை வைத்து இணைந்தால் வரவேற்போம்… என்றார்.

பாஜகவின் வேல் யாத்திரையால் தமிழகத்தில் பாஜக எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறித்த கேள்விக்கு யாத்திரையால் எந்த மாற்றமும் வராது என்றால் எதிர்க்கட்சிகள் ஏன் பயப்பட வேண்டும். ஏன் யாத்திரை தொடங்கியதிலிருந்து தினந்தோறும் வேல் யாத்திரை குறித்த விமர்சனங்களை எதிர் கட்சிகள் தான் முன்வைக்கின்றன. இது அவர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பது நிதர்சனம் ஆகிறது! எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பு இருக்கிறதோ இல்லையோ பாரதிய ஜனதாவிற்கு செல்வாக்கு கூடியிருக்கிறது… என்றார்.
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்த கேள்விக்கு தில்லியில் நடைபெறுவது விவசாயிகளின் போராட்டம் அல்ல, விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நடுவில் உள்ள புரோக்கர்கள் நடத்தி வருகின்றனர். செலவு செய்து ஆட்களை கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார்கள், அதிலும் கூட சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து இருக்கிறார்கள். காலிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் போடுகிறார்கள், விவசாயிக்கும் காலிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..?
ஏவி விட்டது யாரோ..! அதனால் விவசாயிகள் பாதிக்கக் கூடாது என்பதால் தான் சமாதானம் பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். வருகிற 9-ஆம் தேதி விவசாயிகளை சந்திக்க உள்ளோம், அவர்களுக்கு புரிய வைத்து நல்லபடியாக தீர்வை எட்டுவோம்… என்றார் இல.கணேசன்.
தொடர்ந்து வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த இல.கணேசன், நிச்சயமாக திருத்த சட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடையாது, நிறைவேற்றியது நிறைவேற்றியது தான் விவசாயிகளுக்கு அதை புரிய வைப்போம் என்றார்.