கொரோனா தொற்று இரண்டாம் அலையாக மீண்டெழுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்பட்டுத்தும் வகையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31.03.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களின் மூலமாக நோய் பரவலை தடுக்கும் வகையில், அந்த மாநிலங்களிருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களுக்கு இ – பாஸ் நடைமுறையினை மீண்டும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது , மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் அதன் காரணமாக மக்கள் மத்தியில் மெத்தனபோக்கு காணப்படுகிறது . எனவே கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை வீசுவதற்கு வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பொதுமக்கள் அரசின் அறிவுறுதலின்படி கட்டாயம் முகக்கவசம் அணியவும் , அடிக்கடி கைக்கழுவவும் , சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும், கண்டிப்பாக கூட்டம் கூட கூடாது என்பதையும், கூட்டமான இடங்களுக்கு செல்லமால் தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது .
பொது இடங்களில் இனி வருங்காலங்களில் எவரேனும் முகக்கவசம் அணியாமல் இருந்தால், அபராதத் தொகை ரூ .200 விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்படுவதாகவும் பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமையை கண்டறிந்து உடன் அபராதத் தொகை விதிக்க சுகாதாரத்துறை , காவல்துறை , உள்ளாட்சி , நகராட்சி , பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது .
பொதுமக்கள் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் த.அன்பழகன் கேட்டுக் கொள்கிறார்.