மூன்றாவது அலையை எதிர்கொள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் ஸ்ரீ ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வெல்லம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.25 ஆயிரமும், இரும்புக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.5 ஆயிரமும், மீன், இறைச்சி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.60 ஆயிரமும், பேரணாம்பட்டு அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரமும், வேலூர் நேதாஜி காய்கனி வணிகர் சங்கம் சார்பில் ரூ.55 ஆயிரமும், வேலூர் ஜெயின் சங்கம் சார்பில் ரூ.21 ஆயிரம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கப்பட்டது.
அப்போது, மாவட்ட ஆட்சியர் பேசும்போது, ”வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முதல் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைப்படி பெரும் உயிர் இழப்புகளை தவிர்த்தோம். இரண்டாவது அலையில் பெரிதும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளை பாதுகாக்க 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு மூன்றாவது அலையை எதிர் கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணி வண்ணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு, ஜெயின் சங்கத் தலைவர் ருக்ஜி ராஜேஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.