30-03-2023 1:31 AM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்விஷ்ணு சகஸ்ரநாமம்.. கங்கையின் பங்கு!

    To Read in other Indian Languages…

    விஷ்ணு சகஸ்ரநாமம்.. கங்கையின் பங்கு!

    கண்ணனின் ஆயிரம் நாமங்கள் மீட்டுத்தந்த கங்கை
    குருக்ஷேத்திரப்போர்க்களம். யுத்தத்தில் சிங்கம் போலச்சுற்றித் திரிந்த பீஷ்ம பிதாமகர் அர்ச்சுனனால் வீழ்த்தப்பட்டு, அம்புப் படுக்கையில் சயனித்துக் கொண்டிருந்தார்.

    உடல் முழுவதையும் அம்புகள் தைத்திருந்தாலும் பீஷ்மரின் தேஜஸ்சும் கம்பீரமும் குறையவேயில்லை.

    அந்த வேதனையான நிலையிலும் பாண்டவர்களுக்கு அவர் தர்ம சாஸ்திரங்களைப் போதித்துக் கொண்டிருந்தார்.

    அவர் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த, தர்மருக்கு ஒரு சந்தேகம் வந்தது.“பாட்டனாரே. நீங்கள் இதுவரைச் சொன்ன தர்மங்கள் அனைத்தும் தலை சிறந்தவையே. அதில் எள்ளளவும் ஐயமில்லை

    .ஆனால் அவை எளிதில் இந்த சம்சார சாகரத்தைக் கடக்க வழிவகைச் செய்வதில்லை. மேலும் அவை கடைப்பிடிக்க மிகவும் கடினமாக உள்ளது. ஆகவே எந்த தர்மம் நினைத்த மாத்திரத்திலேயே இந்தப் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யுமோ, அந்த தர்மத்தை தயவுகூர்ந்து உபதேசித்தருளுங்கள்.” என்று தன்னுடைய சந்தேகத்தை பீஷ்மரிடம் தருமர் கேட்டார்.

    இதை கேட்டவுடன் பீஷ்மர்,அங்கு நடப்பதற்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது போல் நின்று கொண்டிருந்த கண்ணனை நோக்கிக் கை குவித்தார். பக்தியில் அவரது கண்கள் குளமானது.இப்படி ஒரு கேள்வியை தருமரை கேட்கச் செய்தது சாட்சாத் அந்த கண்ணனே என்பது அவருக்கு புரிந்தது.

    மனக்கண்ணில் அந்த பரமனின் விஸ்வரூபம் தெரிந்தது. மெல்லப்பேச ஆரம்பித்தார். “ அப்பனே! தர்மா! இதோ இங்கு இருக்கிறானே இந்த கண்ணன் இவனது நாமங்களை கேட்டாலே போதும். கோடான கோடி ஜென்மத்தில் நீ செய்த பாவங்கள்எல்லாம் உடன் அழிந்து போகும்.

    அவன் நாமங்களை சதா ஜெபித்தால் ஆழமான இந்த சம்சாரக்கடல் அறவே வற்றிப் போகும். நான் இப்போது, அவன் நாமங்களை உள்ளம் உருகச் சொல்கிறேன். அதை நன்கு மனதில் பதித்துக்கொள்.” என்றபடி பீஷ்மர் கண்களை மூடினார்.

    அந்த மாயக் கண்ணனை தியானித்தார். அவரது உதடுகள் மெல்ல விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தது. அனைவரும் அதைக் கேட்டு மெய்மறந்தனர். அமுத மழை பொழிவதைப் போல மாலவனின் ஆயிரம் நாமங்களை பீஷ்மர் சொல்லி முடித்தார்.

    பஞ்ச பாண்டவர்களும் பீஷ்மரிடம் ஆசி பெற்று தங்களது வசிப்பிடத்திற்குத் திரும்பினார்கள். பாண்டவர்கள் அனைவரின் மனமும் பீஷ்மரின் உபதேசங்களைக் கேட்டபின் தெளிந்த நீர்ப்போல இருந்தது. ஆனால்
    சகாதேவன் மனது மட்டும் வருத்தத்தில் வாடிக்கொண்டிருந்தது.

    அதை உணர்ந்தது போல மாதவன் சட்டென்று அங்கு வந்தான்.கையில் புல்லாங்குழலை வைத்துக்கொண்டு நின்ற அவனைக் கண்டதுமே சகாதேவனின் மனம் அமைதி அடைந்தது. அவனது மோகனப் புன்னகை ஆளை மயக்கியது. கருநீல மேகம் போன்ற அவனது மேனியின் நிறம் அவன் பொழியப் போகும் கருணை மழையை உணர்த்தியது. கண்ணனின் பாத மலர்களில் சகாதேவன் கையிலிருந்து நழுவியப் பொருளைப் போல விழுந்தான்.“

    கண்ணா! பரம்பொருளே! வைகுண்டவாசா! உலகம் உய்ய‌பீஷ்ம பிதாமஹரின் வாயிலிருந்து உனது ஆயிரம் நாமங்களை வரவைத்தாய். ஆனால் மனிதர்களாகிய நாங்கள் பீஷ்மரின் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்களை சேமித்து வைக்கவில்லையே. ஆம் பிரபோ!

    உனது ஆயிரம் நாமங்களை செவிக்குளிறக் கேட்ட நாங்கள் யாரும் அதை குறித்து வைத்துக் கொள்ளவில்லையே. பெறுதற்கு அறிய பேறு பெற்ற பின்பும்அதை நழுவ விட்ட எங்களது துர்பாக்கியத்தை என்னவென்று சொல்வது? மாயக்கண்ணா! உன்னால் ஆகாததும் உண்டா. நீ நினைத்தால் எங்களுக்கு அந்த பொக்கிஷத்தை மீண்டும் தரமுடியும்.

    தயவு செய்து இந்த ஏழைகளின் மீது கருணைப் பொழிந்து அருள்செய்வாய். உனது ஸஹஸ்ரநாமத்தை முழுவடிவில் நாங்கள் பெற ஒரு உபாயம் சொல்வாய்.” என்றபடி சஹாதேவன் மாதவனின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

    சரணடைந்தவர்களை ஒரு போதும் கைவிடாத பரம்பொருள் அல்லவா அந்த கேசவன். உற்ற பக்தன் சஹாதேவனைக் கைவிடுவானா?. அவனுக்கு அருள்மழை பொழிய சித்தம் கொண்டான்.“கலங்காதே சஹாதேவா, பீஷ்ம பிதாமகர் உத்தராயணம் பிறந்ததும் என்னோடு இரண்டறக் கலப்பார்.

    பின்பு அவரது கழுத்தில் இருக்கும் ஸ்படிக மாலையை எடுத்து நீ அணிந்துக் கொள். என்னை மனமாற த்யானி. உன் வாயிலிருந்து தானாகவே சஹஸ்ரநாமம் அருவி போல கொட்டும். உன் மூலமாக இந்த வையகம் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்ற அருமருந்தை மீண்டும் பெறும்.” என்றபடி கண்ணன் சஹாதேவனின் தோளில் தன் திருக்கரங்களை வைத்து சமாதானம் செய்தான்.

    ஆனால் சஹாதேவனின் மனம்தான், சாந்தி அடையவில்லை.சாதாரண ஸ்படிகமாலைக்கு இவ்வளவு மகத்துவம் எங்கிருந்து வரும் என்ற கேள்வி மனதில் உதித்தது. கூடவே கண்ணன் நம்மிடம் விளையாடுகிறானோ என்ற சந்தேகமும் வந்தது. அதை அவனது முகம் அப்பட்டமாக காண்பித்தது.

    அதை கவனித்த கண்ணன், “ என்ன சஹாதேவா சாதாரணஸ்படிக மணிக்கு இவ்வளவு மகத்துவமா? என்று சிந்திக்கிறாயா?” என்று கேட்டார்.

    கண்ணனிடமிருந்து இந்த கேள்வியை சற்றும் எதிர்ப் பார்க்காத சஹாதேவன் சற்று விழிக்கத்தான் செய்தான். அதை கண்ட மாயக்கண்ணன் கம்பீரமான குரலில் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான்.

    பல ஆண்டுகளுக்கு முன்னால் பீஷ்மரின் இளமை காலத்தில் நடந்த சம்பவம் அது…… கங்கை ஆற்றங்கரை. அதில் சிந்தித்தப்படியே ஒரு இளைஞன் நடந்துக் கொண்டிருந்தான்.

    அந்த சிறுவயதில் அவனுக்கு இருந்த வீரமும் கம்பீரமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அவனது முகத்தில் கவலையின் சாயல். கவலையைத் தீர்க்க ஒரு வழி கண்டவன் போல் கங்கா நதியைப் பார்த்துப் பேசத்தொடங்கினான்.“

    அம்மா!உலகில் உள்ளவர்கள் உன் பெருமையை எண்ணி உன்னை கங்கா மாதா என்று அழைக்கிறார்கள். ஆனால் எனக்கோ , என்னைப் பெற்றத் தாயே நீதான். அம்மா, தந்தை சந்தனு மகாராஜா மச்சகந்தி என்ற பெண்ணை விரும்பினார். ஆனால்அவர் அந்தப் பெண்ணை மணக்க என் திருமண வாழ்வு தடையாக இருக்கும் என்பதை அறிந்த நான், சட்டென்று கொதித்து எழுந்தேன். இனி என் வாழ்வில் இறுதி மூச்சு உள்ளவரை நான்‌ பிரம்மச்சாரியாக வாழ்வேன் என்று சபதம் எடுத்தேன். அனைவரும் சிந்திக்கக் கூடத் தயங்கும் காரியத்தை நான் செய்ததால் தேவர்கள் எனக்கு பீஷ்மன் என்றப் பெயரைச் சூட்டினார்கள்.

    ஆனால் உண்மையான சிக்கல், இனிதான் தொடங்க உள்ளது தாயே. என் வாழ்வில் நான் நூலளவும் பிழறாமல் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு உண்டான சக்தியை என்னை கருவில் சுமந்த தாயான நீதான் தரவேண்டும். ஆம் நீதான் தரவேண்டும்.” என்று கங்கா நதியின்முன் மண்டியிட்டு வேண்டினார் அந்த இளைஞர்.

    அது வேறு யாரும் இல்லை சாட்சாத் பீஷ்மர் தான். அவர் இப்படி பிரார்த்தனை செய்தது தான் தாமதம். கங்காதேவி அவர் முன் பிரத்யட்சமாக காட்சி தந்தாள். தனக்கு அருள வந்த தாயின் பொற்பாத கமலங்களை இளவயது பீஷ்மர் வணங்கினார்.அவரைத் தொட்டு, தூக்கி , தாயன்பு பெருக மார்போடு அணைத்துக் கொண்டாள் கங்கா தேவி.

    மகனே தேவவிரதா இல்லை இல்லை பீஷ்மா. ஆம் அதுதானே உன் புதிய பெயர். நீ செய்த செயல் என்னை பூரிப்பில் ஆழ்த்தியுள்ளது மகனே. இனி உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும். கவலைப் படாதே. எங்கே கையை நீட்டு” என்று பீஷ்மரைப் பார்த்து,கங்காதேவி அன்புக் கட்டளையிட்டாள்.

    பீஷ்மரும் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்ப் போல தன் இரண்டு கைகளையும் தாயின் முன் நீட்டினார். கங்கா தேவி , கங்கா நதியின் ஜலத்தை சிறிது தன் கைகளில் எடுத்து அதை பீஷ்மரின் கைகளில் விட்டாள்.

    அந்த நீர் சூரிய ஒளியில் மின்னிக்கொண்டே பீஷ்மரின் கைகளில் சேர்ந்தது. பீஷ்மர் தன் கைகளைப் பார்த்தார். ஆனால் அதில் கங்கா ஜலத்தை காணவில்லை. அதற்குப்பதில் ஸ்படிக மணிகள் மின்னிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த பீஷ்மரின் கண்கள் ஆச்சரியத்தில் அகண்டு விரிந்தது.

    அதைக்கண்ட கங்கா தேவி, தன் மகன் கேட்கும் முன்னால் தானே விளக்கம் தர ஆரம்பித்தாள். “ மகனேபீஷ்மா. தூய்மையான கங்கா ஜலமே உன் கைகளில் ஸ்படிக மணிகளாக மின்னுகிறது. இதை மாலையாக அணிந்துக்கொள். இதன் வடிவில் உன்னோடு இருந்து உன்னை நான் எப்போதும் வழி நடத்துவேன். கவலை வேண்டாம். இந்த ஸ்படிகம் போல உன் மனமும் நிச்சலமாக என்றும் இருக்கும். ஆசிகள்” என்று கூறி தனது மகன் பீஷ்மரின் தலையில் தனது கரத்தை வைத்து ஆசீர்வதித்து விட்டு கங்காஜலத்துடன் கங்காதேவி கலந்தாள்….

    .“இப்படி பீஷ்மர் மேற்கொண்ட கடுமையான விரதத்தை, நிறைவேற்ற கங்கா தேவியே ஸ்படிகமணிகளாக மாறி தனது மகனுக்கு துணை நின்றாள். ஆகவே, பீஷ்மருக்குள் இருக்கும் ஞானம் அந்த ஸ்படிக மணிகளிலும் இருக்கும். புரிந்ததா சகாதேவா?”என்றபடி மாதவன் யாரும் அறியாத ஒரு தேவ ரகசியத்தை தன் பக்தனுக்காக போட்டு உடைத்தான்.“ எனக்கு பீஷ்மரின் பிரம்மச்சரிய விரத்தத்திற்கு துணை நின்றது யார் என்றும் புரிந்தது.

    கங்கா தேவிக்கு எப்படி உலகமே போற்றும் பீஷ்மரை குழந்தையாகப் பெறும் பாக்கியமும், பீஷ்மருக்கு துணை நிற்கும் பாக்கியமும் எப்படி கிடைத்தது என்றும் புரிந்தது.

    ஆம்கண்ணா. உனக்கு உன் வாமன அவதாரம் நினைவில் உள்ளதா? அதில் நீ இரண்டடியால் உலகை அளந்த போது பிரம்மதேவர், தன் கமண்டலத்து நீரால் உன் திருப்பாதங்களுக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீரே இன்று வையகத்தில் பாவம் போக்கும் புண்ணிய நதி கங்கையாக திகழ்கிறது.

    இல்லையென்றால் சாதாரண ஒரு நதிக்கு பாவம் போக்கும் பேராற்றல் எப்படி வரும். அது மட்டுமா? உன் பாத தீர்த்தத்தைஎன்றும் தலையில் சூடிக்கொண்டல்லவா பசுபதியான பரமேஸ்வரனும், சுடுகாட்டில் திரிந்தாலும் பக்தர்களால் சிவன் அதாவது, மங்களமானவன் என்று அழைக்கப்படுகிறார்?.

    இத்தனை மகத்துவமும் கங்கைக்கு வந்ததற்குக் காரணம் உன் ஸ்ரீ பாத வைபவமே. ஆகவே அந்த பாதத்தில் சரணாகதி செய்கிறேன்மாதவா!” என்று மாதவன் பாதங்களில், சகாதேவன் சாஷ்டாங்கமாக விழுந்தான்.

    பிறகு அவன் பீஷ்மரின் ஸ்படிக மாலையை அணைத்துக் கொண்டு, ஸ்ரீமன் நாராயணனை த்யானித்தான். அவன் வாயிலாக இந்த வையகத்திற்கு மீண்டும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கிடைத்தது.

    இப்படி, கங்கா மாதா, நமது பாவங்களை மட்டும் போக்கவில்லை. சம்சாரம் என்னும் கடலில் துரும்பைப்போல தத்தளிக்கும் நமக்கு,படகு போல விளங்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் மீட்டுத் தந்திருக்கிறாள். இன்னும் அவள் மகிமைகளும் பெருமைகளும் ஏராளம்.

    கங்கையின் சிறப்பு சென்ற இடங்கள்

    கங்கைகள்
    கங்கையில் நீராடுவது, கங்கைக் கரையில் வசிப்பது, ‘கங்கா’ என்று உச்சரிப்பது, கங்கையின் நீரைப் பருகுவது, கங்கையை நினைப்பது…இவை யாவும் பாவம் போக்கும் செயல்களாகும்!!

    கங்காதேவி! இவள்…. தான் பாய்ந்து வரும் வழிநெடுகிலும் உள்ள பல்வேறு தலங்களில், பல்வேறு சிறப்புகளுடன் திகழ்கிறாள்!!

    அமர் கங்கா….
    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது அமர்நாத் குகை. இதன் அருகே ஓடும் ‘அமர் கங்கா’ நதி நீர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.!!

    நீல கங்கா.
    ஒரு முறை, பார்வதிதேவியுடன் விளையாடியபோது, அவளின் கண் மை, சிவனாரின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. பரமனார் கங்கையில் முகம்கழுவ… நதி நீர், நிறம் மாறியது! இதனால், ‘நீல கங்கா’எனப் பெயர் பெற்றது.!!

    காளி கங்கா..
    அமைதியின்றி ஆர்ப்பரித்து ஓடும் இந்த நதியின் சீற்றம், காண்போரை பயம் கொள்ள வைக்கும்.!!

    ராம் கங்கா..
    இது, உத்தரப் பிரதேசத்தில்- காசிப்பூர் என்ற இடம் தாண்டிப் பாய்கிறது.!!

    ஜட கங்கா…
    உத்தரப் பிரதேசம், குமாயூன் மண்டலின் பித்தோ ராகர் என்ற ஜில்லாவில் பாய்கிறது.!!

    கோரி கங்கா..
    வெண்மையான நீர் கொண்டு வருவ தால் கோரி (வெள்ளை) கங்கா என்று பெயர் தார்சூலா/முன்ஸியாரி கிராமத்தையடுத்து பாய்கிறது.!!

    கருட கங்கா..
    உத்தரப் பிரதேசம், அல்மோரா- பைஜ்நாத் சோத்திரம் அருகே பாயும் கங்கைக்கு, ‘கருட கங்கா’ என்று பெயர்.!!

    பாண கங்கா.
    ஜம்மு’வைத் தாண்டி, ஸ்ரீவைஷ்ணவி கோயில் அருகே பாய்கிறது பாண கங்கா.!!

    பால கங்கா..
    இந்த நதி நீரில், ஸ்ரீவைஷ்ணவிதேவி தன் கூந்தலை அலசிய தால், ‘பால கங்கா’ என்றுபெயர்!!!

    ஆகாச கங்கா:..
    கயிலாய மலையை பரிக்ரமா (கிரிவலம்) செய்யும்போது, அங்கு காணப்படும் நதியே ஆகாச கங்கை!

    பாதாள கங்கா..
    ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீசைலம் என்ற சிவ சோத்திரத்தின் அருகே பாய்கிறது பாதாள கங்கா!!

    தேவ கங்கா..

    இது, மைசூர்- சாமுண்டி மலைக்குக் கிழக்கே பாய்கிறது.!!

    துக்த_கங்கா…

    வடமொழியில் ‘துக்தம்’ என்றால், பால் என்று பொருள். கேதார்நாத் என்ற ஜோதிர்லிங்க சோத்திரத்தின் அருகே பாய்கிறது.!!

    வாமன் கங்கா…
    வாமன் என்றால், ‘குள்ளம்’ என்று அர்த்தம்! மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில், ‘பேடாகாட்’ என்ற சலவைக்கல் பாறைகள் உள்ள இடத்தில் பாய்கிறது.!!

    கபில் கங்கா..
    நர்மதை பரிக்ரமா (வலம் வரும்) செய் யும் வழியில் வருவது, ‘தம் கட்’ என்ற ஊர். இங்கிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் ஓடுகிறது கபில் கங்கை!!
    கரா கங்கா….

    சோணபத்திரை நதியின் உற்பத்தி ஸ்தானத்துக்குத் தெற்கில் அமைந்துள்ள இடம் பிருகு கமண்டலம். இங்கு பாய்வதே கரா கங்கா.!!

    மோக்ஷ கங்கா…
    நர்மதை நதியை வலம் வரும்போது சூலபாணேஸ்வரர் வரும்.. இங்கிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது ‘மோக்கடி’ என்ற கிராமம். இதையட்டி, ‘மோக்ஷ கங்கா’ ஓடுகிறது.!!!

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    20 − 20 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...