
தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேலுார் பகுதியில் வசித்து வருபவா் கூலித்தொழிலாளி சீதாராஜ். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஐந்து வயதில் இசக்கியம்மாள் என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த .கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி இசக்கியம்மாள், அருகிலிருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து விபரீதம் தெரியாமல் சாப்பிட்டுள்ளார். இதனால் வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு சிறுமி அலறித்துடித்துள்ளார்.
இதனை அடுத்து பதறிப்போன பெற்றோர்கள் உடனடியாக அரசு மருத்துமனைக்கு சிகிச்சைகாக அழைத்துச் சென்றனா். அங்கு சிறுமி இசக்கியம்மாளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தென்காசி அரசு மருத்துமனைக்கு மேல் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.

தென்காசி அரசு மருத்துமனையில் மருத்துவர்கள் சிறுமி இசக்கியம்மாள் பிளீச்சிங் பவுடரை உட்கொண்டுள்ளதை உறுதி செய்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் உடல் எடையும் கணிசமாகக் குறைந்தது. இதனால் சிறுமி தற்போது எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார்.

இந்நிலையில், மருத்துவர்களிடம் இதுதொடர்பாக பெற்றோர்கள் மீண்டும் அணுக, சிறுமியை மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பெற்றோர் தங்களின் வறுமைச் சூழல் காரணமாக சிறுமி இசக்கியம்மாளை சென்னை அல்லது மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், எனவே அரசு அல்லது தனியார் அமைப்புகள் உதவ வேண்டும் என்றும் கோரினர்.

இது குறித்த வீடியோ ஒன்றும் சமூகத் தளங்களில் வெளியானது. இதனை அடுத்து, இது குறித்து அறிந்த செங்கோட்டை அரசு மருத்துமனை மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜேஷ் கண்ணா, சிறுமி இசக்கியம்மாளின் மருத்துவ சிகிச்சைக்கு சென்னை செல்வதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாக சிறுமி இசக்கியம்மாளின் பெற்றோரிடம் உறுதி அளித்தார்.


