நடைப்பயிற்சி சென்ற அதிமுக கிளைச் செயலாளர் படுகொலை: ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம்

Published:

murder தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்ற அதிமுக கிளைச் செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறவினர்கள் மற்றொரு பிரிவினரின் வீடுகளை சூறையாடினர்.இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி புதுமனை தெற்குத் தெருவைச் சேர்ந்த பிச்சையா (54), அ.தி.மு.க. கிளைச் செயலாளராக உள்ளார்.  மேலும் இப்பகுதி ஊர்த் தலைவராகவும் உள்ள இவர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். பிச்சையா தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அது போல் இன்று அதிகாலை 6 மணிக்கு இந்திரா நினைவுக் குடியிருப்பு அருகே நடைப்பயிற்சிக்கு  சென்றார். அப்போது அங்கு இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர்,  கையில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிச்சையாவை வெட்டினர். அவர்களிடம் இருந்து விலகிக் கொண்டு தப்பியோடினார் பிச்சையா.  ஆனாலும் அவரை விரட்டிய மர்ம கும்பல் பிச்சையாவை விடாமல் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியது. இதில் பிச்சையாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரைக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்தச் சம்பவங்களைக் கண்டு அலறி ஓடிய பொதுமக்கள், பின்னர் போலீஸில் தகவல் கொடுத்தனர். ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிச்சையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிச்சையாவைக் கொலை செய்தவர்கள் யார், எதற்காகக் கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துரை விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. துரை உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பிச்சையாவின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள மற்றொரு பிரிவினரின் வீடுகள் மீது கல்வீசித் தாக்கினர். அங்கிருந்த தேவாலயத்தின் பூட்டுகளை உடைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து எஸ்.பி. தலைமையில் அதி விரைவுப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் காரணமாக கொங்கராயகுறிச்சிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களும் அரசுத் தேர்வுக்குச் செல்ல தயாரான நிலையில் இருந்த மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பிச்சையா கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பழிக்குப்  பழியாக இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று தெரியவந்தது. கொங்கராயகுறிச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும், பள்ளி தாளாளருமான தேவசகாயம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக பிச்சையா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img