பிரதமரின் நிதி உதவி பெறும் 38 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை விளக்கி கடிதம் எழுதப்படுகிறது. மேலும், உழவருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக, பாஜக., தொண்டர்கள் வரும் 25ஆம் தேதி முழுதும் விவசாயிகளை சந்தித்துப் பேசுகின்றனர்” என தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக., சார்பில் மத்திய அரசின் விவசாய திட்டங்கள் வேளாண் சட்டங்கள் தொடர்பான தமிழ் கையேட்டை சென்னையில் நேற்று தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டார். இந்த கையேட்டை, விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.
அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டங்களும், சலுகைகளும் சுதந்திர இந்தியாவில் இதுவரை யாரும் செய்ததில்லை. நேற்று மட்டும் நாடு முழுதும் 9.50 கோடி விவசாயிகளுக்கு ‘பி.எம்., கிசான்’ திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணையாக, அவர்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் என 19 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சரித்திர சாதனை. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்திலும் 38 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
அவ்வாறு மோடி அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ள 38 லட்சம் விவசாயிகளுடன், தமிழக பாஜக.,வினர், வரும் 25ஆம் தேதி ஒருநாள் முழுதும் செலவிட திட்டமிட்டுள்ளனர். அந்த நாளை ‘உழவருடன் ஒரு நாள்’ என்று அழைக்கிறோம்.
விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளார்; குறிப்பாக தமிழக விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளார் என்ற விவரங்கள் அடங்கிய கடிதம் அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் அவர்களுடன் காலம் முழுதும் நீடிக்கக் கூடிய உறவு ஏற்படுத்தப்படும். மத்தியில் பாஜக., அரசு பொறுப்பேற்ற பிறகுதான் 23 விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. அதற்கு முன் இரண்டு பொருட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இப்போது மத்திய அரசின் அனைத்து வேளாண் திட்டங்களும் இடம்பெற்றுள்ள புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். இது பாஜக., விவசாய அணி சார்பில், விவசாய சங்கங்கள், வேளாண் உற்பத்தி சங்கங்களிடமும் நேரடியாக கொடுக்கப்படும்… என்றார் அண்ணாமலை.
பாஜக @bjpkm_tn சார்பில் மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்களை விளக்கும் கையேடு இன்று கமலாலயத்தில், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு @blsanthosh அவர்களால் வெளியிடப்பட்டது. பிரதமரின் நிதி உதவி பெறும் 38 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை விளக்கி கடிதம் எழுதப்படுகிறது.