தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக தமிழகம் எங்கும் பல கோவில்களில் புதிய பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இரண்டு மடைப்பள்ளி சிப்பந்திகளும், தெப்பக்குளம் நாகநாதசுவாமி கோவிலில் ஒரு அர்ச்சகரும், குமார வயலூர் முருகன் கோவிலில் 3 அர்ச்சகர்களும், ஓர் ஓதுவாரும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3 அர்ச்சகர்களும் சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களான ஆதி மாரியம்மன் கோவிலுக்கு 2 அர்ச்சகர்களும் மாகாளிக்குடி உஜ்ஜயினி காளி அம்மன் கோயிலுக்கு ஒரு அர்ச்சகரும், முக்தீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
புதிய பணியாளர்கள் பொறுப்பேற்க வந்த நிலையில் அந்தந்தக் கோயில் நிர்வாக அதிகாரிகள் திங்கள் காலை கோயிலுக்கு அவர்களை அழைத்து வந்து மற்ற பணியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். ஆனால் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்ற அதிருப்தி, கோயில் பணியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது!
இதுகுறித்து கோயில் பணியாளர்களிடம் விசாரித்தபோது, ஒரு கோயிலில் மடைப்பள்ளிக்கு பணியமர்த்தப்பட்டுள்ள நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை அசைவ கடையில் பணியாற்றியுள்ளார்; அவரை மடைப்பள்ளி சமையல் செய்ய எப்படி அனுமதிக்கலாம் என ஒரு பிரிவு அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர்கள், போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி கேட்டு சென்றுள்ளனர். இதற்கு இடையே சிவாச்சாரியார்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், எனவே போராட்டத்தை ஒத்திவைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்!
இதுபோன்ற பிரச்சனைகளால் சில கோயில்களில் குழப்பமான சூழ்நிலை காணப்படுகிறது!
இந்நிலையில் இந்தச் செய்தி சமூகத் தளங்களில் வைரலானது. இது குறித்து கருத்து வெளியிட்ட சமூகத் தள வாசிகள், கோயில்களின் ஆசாரங்களை அழித்து, இந்து ஆலய மக்கள் செண்டிமெண்ட்களை வேண்டுமென்றே அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்ள்நோக்கமே அரசுக்கு இருப்பதாகக் கூறுகின்றனர்.
கோயில் வாசலில் இறைச்சித் துண்டுகளை வீசி எறிந்து பதற்றத்தை உருவாக்க நினைக்கும் சமூக விரோதிகளின் செயலுக்கு எவ்விதத்திலும் குறைவு இல்லாதது, மாநில அரசின் அறநிலையத்துறையின் செயல்பாடு என்று குறிப்பிடும் அவர்கள், அந்த சமூக விரோதிகளுக்கு அரசு தண்டனை தரலாம், ஆனால் அரசு சமூக விரோதியானால் யார் தண்டனை தருவது என்று குறிப்பிட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.