தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்திற்கு இன்று சொகுசு காரில், ஆள் உயர மாலை, கழுத்து நிறைய நகைகளையும் அணிந்தபடி வந்த பெண் சாமியாரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஸ்ரீபவித்ரா காளிமாதா. இவர் தஞ்சை சரக டிஐஜி தான், தஞ்சையின் காவல் தெய்வம் மக்களை காக்கும் காவல் தெய்வம் அதனால் அவருக்கு அருளாசி வழங்க வந்ததாக தெரிவித்தார்.
நாட்டில் பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் தஞ்சை மண்ணிலிருந்து இன்று புறப்படுகிறேன். தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு ஆசிர்வாதம் செய்திட உள்ளேன் என்றார்.
கர்நாடகா, ஆந்திரா, தில்லி, பஞ்சாப், பீகார், குஜராத் என இந்தியா முழுவதிலும் மக்களுக்கு ஆசி வழங்கிட, இறைவனின் ஆசிர்வாதத்தை கொடுத்திட இறைவன் அனுப்பி தான் வந்துள்ளேன். இன்று தஞ்சையிலிருந்து புறப்படுகிறேன் என்கிறார். மேலும் அம்பாள் சொல்வதை நான் செய்கிறேன் என்றும் தெரிவித்தார்.
கிறிஸ்துவ தேவாலயம்
நாடு முழுவதிலும் இந்து கோயில், கிறிஸ்தவ தேவாலயம், இஸ்லாமிய தேவாலயம் ஆகியவற்றை அதிக அளவில் கட்டிட வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே இந்தியா முழுவதும் நிறைய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை உள்ளன என்றார். இவர் டிஐஜி அலுவலகத்திற்கு வரும் போது கழுத்தில் ஆள் உயர மாலை, நிறைய நகைகளை அணிந்து கொண்டு வந்த சொகுசு காரில் வந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சில்வர் நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டு கழுத்தில் சிவலிங்கத்தை கற்களால் பதித்த டாலர் செயின், நிறைய காசு மாலைகளுடன் நகைக் கடை விளம்பரத்தை விட அதிக நகைகளை அவர் அணிந்திருந்தார்.
சாமியார் என்றால் காவி உடைக்கு சொந்தக்காரர் என்பதை மாற்றி, பெரிய கவுன் போன்று மாடர்ன் உடையில் நல்ல ஐவரி நிறத்தில் அவர் உடை அணிந்திருந்தார்.
டிஐஜியை காவல் துறை அதிகாரி என்ற முறையில் தான் சந்திக்கவில்லை. அவர்தான் எல்லை தெய்வம் என்பதால் அவரை சந்திக்க வந்தேன் என மீண்டும் மீண்டும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா முழுவதும் ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் அதிகரித்து வருகிறார்கள். நாம் பார்த்தவரை கையில் கம்பு, காவி உடையில்தான் காட்சி தருவார்கள் பெண் சாமியார்கள், ஆனால் இந்த ஸ்ரீபவித்ரா காளி மாதா சற்று வித்தியாசமாக இருக்கிறார்.