திண்டுக்கல்லில் வீட்டின் கதவை தாழிட்டுக் கொண்டு சிக்கிய ஒன்றரை வயது குழந்தை, சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல், மெங்கில்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் சிவகாமிநாதன். வங்கி மேலாளர். மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஆஷிவ் அதர்வா என்ற மகன் உள்ளார். நேற்று வீட்டினுள் குழந்தை உள்பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டு, வெளியே வரமுடியாமல் கத்தியது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர், திண்டுக்கல் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் வீரர்கள் வித்யாபதி, சரவணன், அகஸ்டின், பாண்டியராஜன் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து ஹைட்ராலிக் டோர் ஓபனர் மூலமாக கதவு திறக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் போராடி மீட்கப்பட்ட குழந்தை ஆஷிவ் அதர்வாவை கண்டு பெற்றோர், உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.