மனநலம் பாதித்த மகனுக்கு 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த மாமனார் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த ஒட்டனேரியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கைக்குழந்தைதயுடன் காவல்நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பெண் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான், ஒட்டனேரியில் வசித்து வருகிறேன். கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி 16 வயதான எனக்கும் சித்தூர் மாவட்டம் ராமாபுரத்தைச் சேர்ந்த ராமுலு என்பவரது மகன் சதிஷ்குமாருக்கும் கட்டாய திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு எனது மாமனார் மட்டும் எங்கள் வீட்டிற்கு வந்து என் தாயிடம், தனக்கு சொத்துக்கள் உள்ளது.
இதற்கு ஒரே வாரிசு என் மகன்தான். எனவே உங்கள் மகளை எனது மகனுக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று ஆசை வார்த்தை கூறினார். இதனால் எனது தாய் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
திருமணத்திற்கு முன்புவரை எனது கணவர் சதிஷ்குமாரை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. திருமணத்திற்கு பின்னர்தான், என் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இந்நிலையில் ஒரு நாள் எனது மாமனார் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். இதை குடித்த நான் மயக்கமடைந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் எனது மாமனாரால் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தேன்.
இதனால் ஆத்திரமடைந்த நான், அவரிடம் கேட்டபோது, இதை வெளியே சென்னால் என்னையும் என் தங்கை, தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதேபோல் தொடர்ந்து என்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. என் மாமனார் என்னையும் எனது குழந்தையையும் எனது தாய்வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
அதன்பிறகு நானும் எனது குழந்தையும் கணவர் வீட்டிற்கு சென்றோம். அப்போது மாமனார் ராமுலு, மாமியார் அம்சவேணி, நாத்தனார் நதியா ஆகிய 3 பேரும் சேர்ந்து என்னை அடித்து, உதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனர். அக்கம்பக்கத்தினர், என்னை காப்பாற்றினர்.
பின்னர் மாமனார் ராமுலு அவரது காரில் அன்றிரவு 11 மணிக்கு அழைத்துச்சென்று பொன்னை மேல்ரோட்டில் இறக்கிவிட்டு, இதோடு ஒழிந்து விடு என்று என்னையும், குழந்தையையும் காரில் இருந்து தள்ளிவிட்டுச்சென்றார்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நான் குழந்தையுடன் வாழ வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தற்போது வெளிவந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்