விமான நிலையங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் துபாயில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் தங்கம் கடத்தி வரப்பட்டு அவை சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றவும் பட்டுள்ளன.
இந்நிலையில், துபாயில் இருந்து தில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி வருவதை கவனித்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அவர்களின் பெட்டியில் எந்த சட்டவிரோத பொருளும் சிக்கவில்லை. அதன்பின் அவர்கள் இருவரையும் தனித்தனியாக சோதனை செய்து பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
அவர்கள் இருவரும் தங்கள் வாய்க்குள் 951 கிராம் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்துள்ளனர். இதனை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்திவந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கூறிய காவல்துறையினர், ‘சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் நடத்தப்பட்ட சோதனையில் தான் இவர்கள் சிக்கியுள்ளனர்.
முதல் சோதனையின் போது இவர்களிடம் ஒன்றும் சிக்கவில்லை. அதன்பின்தான் இவர்கள் வாயின் உட்பகுதியில் மறைத்து சுமார் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.