சென்னை: ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் இருப்பார்கள் என்பதால், தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப, ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழக பாஜக., தமிழிசை சௌந்தர்ராஜன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் காலியாக உள்ள சுமார் 40,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று மார்ச் 15-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் பெரும்அளவிற்கு பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் 1 முதல் 5-ம் வகுப்பு வாரியான குழந்தைகளுக்கு காய்கறி வாங்கவும், சமைக்கவும் தலா 1.30 ரூபாயும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 1.40 ரூபாயும் தமிழக அரசு வழங்குகிறது. இப்போதுள்ள விலைவாசியால் இது சாத்தியப்படாது என்பது மட்டுமல்ல ஊட்டச்சத்தோடு வளர வேண்டிய குழந்தைகள், குறைபாடோடும், ஊட்டச்சத்து குறையோடும் வளரும் நிலை ஏற்படும். இது தடுக்கப்பட வேண்டும். இந்த அளவு குறைந்த ஒதுக்கீட்டை ஓர் குழந்தைக்கு ஒதுக்கும் போது அது மறைமுகமாக அவர்களுக்குக் கொடுக்கும் காய்கறி அளவிலும், உணவு அளவிலும் குறை ஏற்பட்டு அவர்கள் சோகை பாதித்த குழந்தைகளாகவும், ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாகவும், வளர்ச்சி குன்றிய குழந்தைகளாக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதனால் தமிழக அரசாங்கம் உடனே ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய அளவீட்டை இன்றைய விலைவாசிக்கேற்றார் போல் ஓர் குழந்தைக்கு குறைந்த பட்சம் 5 ரூபாயாவது ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இதை பணமாகப் பார்க்காமல் எதிர்கால ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அரசு செய்யும் முதலீடாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக அங்கன்வாடி குழந்தைகளின் ஆரோக்கியம் இன்று தமிழக அரசின் கையில் இருக்கிறது. தமிழக அரசு உடனே தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கை
Popular Categories


