சென்னை : அனைத்து நாட்களிலும் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி வரும் 7ஆம் தேதி முக்கிய கோவில்களின் முன் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்று பாஜக., தமிழக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது…
கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க வலியுறுத்தி வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்கள் முன்பும் காலை 11 மணிக்கு, நமது புனிதமான நவராத்திரியின் தொடக்க நாளன்று @BJP4TamilNadu மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
திருக்கோவில்களைத் திறக்க மக்களின் தீவிர வேண்டுகோள் தொடர்ச்சியாக இருந்தபோதிலும் சாதாரண மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுக்காத ஊமையாக அரசாங்கம் உள்ளது. மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உணர்ச்சி யற்ற அரசாங்கம் இரண்டாவது அலையின் உச்சத்தில் TASMAC ஐ போலீஸ் பாதுகாப்போடு திறந்தது.
ஆனால் பக்தர்களுக்காக கோவில்கள் திறக்கப்படுவதை மட்டும் விரும்பவில்லை. மேலும் கோவில்களைச் சார்ந்த தொழில் புரியும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது டிவிட்டர் பதிவில் ஓர் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். அதில்…
புனித நாளாக கருதப்படும் வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில், தி.மு.க., அரசு கோவில்களை மூடுகிறது.அதை மாற்றி, அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்ற வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது. கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது, தமிழர்கள் வாழ்வியலின் ஒரு பகுதி.தடுக்க நினைப்பது, தீய எண்ணத்தின் சதியாக இருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
தமிழக அரசின் கோவில் பராமரிப்பு, அறநிலையமாக நடக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் வணிக நிறுவனமாக நடக்கக் கூடாது.கோவில் திறக்காது இருப்பதற்கு, கொரோனா நோயை காரணமாக சொல்வது நகைப்பிற்குரிய செயல். மாற்று மதங்களின் இறை வழிபாட்டு தலங்கள், எந்த இடையூறும் இல்லாமல், அனைத்து நாட்களிலும் அரசின் மறைமுக ஆதரவுடன் இயங்குகின்றன என்பதை நிரூபிக்க, பல சான்றுகள் உள்ளன.
கோவிலை நம்பியிருக்கும் தேங்காய், பூ, பழம் விற்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் கோவில் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 7ம் தேதி காலை 11:00 மணிக்கு முக்கிய கோவில்கள் முன், பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்வர்.இந்த போராட்டத்தை, முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா ஒருங்கிணைக்கிறார்… என்று குறிப்பிட்டுள்ளார்.