
அரசுப் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசுகார்- வழிவிடாத ஆத்திரத்தில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது; காவல்துறை விசாரணை…
மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மதுரை காளவாசல் கோச்சடை வழியாக திருப்பூர் செல்வதற்காக காளவாசலை அடுத்த பாண்டியன் பல்பொருள் கூட்டுறவு அங்காடி முன்பு பேருந்து சென்ற போது, பின்னால் வந்த இனோவா சொகுசு கார் விரைவாக செல்வதற்கு பலமுறை ஒலி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால், பேருந்து மெதுவாகச் சென்றது. இந்த நிலையில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இன்னோவா காரில் வந்த நபர் பேருந்தை வழிமறித்து வழிவிடாத ஆத்திரத்தில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் முத்துகிருஷ்ணனை தாக்கியதோடு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தரக்குறைவாக பேசியுள்ளனர்.
இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்து, அதனை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து அடுத்தடுத்த பேருந்துகளில் வந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஒன்று கூடி காரை ஓட்டி வந்த நபர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களும் ஒன்று கூடி காரை ஓட்டி வந்த நபர்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த அந்த நபர் காரில் ஏறி உடனடியாக தப்பித்துச் சென்றார்.
இந்தச் சம்பவம் குறித்து, எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வந்தனர்.
தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் அந்த வாகனத்தின் உரிமையாளர் பற்றிய விவரம் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த வாகனத்தை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநரான சுரேஷ் (வயது 36) என்பவர் ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் ஓட்டுநர் சுரேஷைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.