தமிழகத்தின் 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமம் வரதராஜ கோவில் இருந்த அனுமன் சிலை காணாமல் போனது.
சிலையை மர்ம நபர்கள் இரவோடு இரவாக கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து செந்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருடுபோன அனுமன் சிலையை குறித்து தேடிய காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரான் ராஜாராமன் www.christy.com என்ற இணையதளத்தில் சிலை உள்ளதை கண்டுபிடித்தார்.
அனுமன் சிலை புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து காணாமல் போன நிலையுடன் ஒப்பிட்டு அதை இந்திய தொல்லியல் துறை மற்றும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார்.
நிறுவன அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தபோது, இது காணாமல் போன அனுமன் சிலை தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சிலை கிறிஸ்டி என்பவரால் ஆஸ்திரேலிய நாட்டில் ஒருவருக்கு ஏலம் விடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு உதவியுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலையை மீட்க தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை முயற்சித்தது.
அனுமன் சிலையை கிறிஸ்டி ஏலம் மூலமாக 37 ஆயிரத்து 500 டாலருக்கு ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்த விசாரணையில் தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்ட சிலை நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் விற்கப்பட்டதும், அவர் ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
ஆஸ்திரேலிய அதிகாரிகள் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் சட்ட அமலாக்க அமைப்பு இணைந்து தற்போது சிலையை மீட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில், ஆஸ்திரேலிய பொறுப்பாளர் மைக்கெல் கோல்ட்மேன் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அனுமன் சிலையை இந்திய உயர் ஆணையர் மன்பீரித் வொஹ்ராவிடம் ஒப்படைத்தார்.
இந்த சிலை இந்தியாவுக்கு வர ஒரு மாத காலம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இச்சிலை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் வேலூர் கிராமம் வரதராஜ கோவிலில் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது .