இந்திய ரயில்வே வரலாற்றில் போட்மெயில்(Boatmail) ரயில் மிக பிரபலமான ரயிலாகும்.போட்மெயில் தனது 108வது வயதில் அடியெடுத்து வைத்து சேவையை தொடர்கிறது.
சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே புதுக்கோட்டை வழியாக செல்லும் 16851/52 போட்மெயில் ரயில் 24/02/22 108 வது பிறந்தநாளை சலனமின்றி கொண்டாடியது.
இந்த போட்மெயில் ரயிலின் வரலாறே சுவராஸ்யமான ஒன்றாகும்.கடந்த 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சென்னை எழும்பூர்- கொழும்பு இடையே #போட்மெயில்(Boatmail) ரயில் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை எழும்பூர்-தனுஷ்கோடி வரை ரயிலிலும், தனுஷ்கோடி-தலைமன்னார் வரை படகிலும் பிறகு தலைமன்னார்-கொழும்பு வரை ரயிலிலும் இயங்கிவந்துள்ளது. பகுதி ரயில் பகுதி படகில் பயணிப்பதாலேயே இந்த ரயிலுக்கு போட்மெயில்(Boatmail) என்று பெயர் வந்தது. மேலும் இந்தியாவையும் சிலோனையும் இணைத்ததால் இந்த ரயில் ‘இந்தோ-சிலோன் போட்மெயில்’ என்றே அன்றைய காலகட்டத்தில் மக்களால் அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சிலோனுக்கு வெறும் ரூ80 கட்டணத்தில் அன்றைய மக்கள் இந்த ரயிலில் பணித்துள்ளனர். இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 50 ஆண்டுகள் வரை இந்தியா/இலங்கை மக்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தாக வரலாறு கூறுகிறது.
22 டிசம்பர் 1964 ஆம் ஆண்டு தனுக்கோடியை தாக்கிய புயலின் போது 100 க்கு மேற்பட்ட பயணிகளுடன் பாம்பனிலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் புயலில் சிக்கியது. பல ரயில் பெட்டிகள் கடலில் மூழ்கின. அதன் பிறகு தனுஷ்கோடி-பாம்பன் பாதை துண்டிக்கப்பட்டது.அதிலிருந்து போட்மெயில் ரயில் ராமேஸ்வரம் வரை மட்டுமே இயக்கப்பட்டுவருகிறது.
தனுஷ்கோடி-ராமேஸ்வரம் இடையே 17.2கிமீ தூரம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த பாதை அமைக்கப்பட்டபின் போட்மெயில் ரயில் தனது பழைய நிலைக்கு திரும்பும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.







