பாடம் நடத்துவதா.. உணவு தகவலை சேகரிக்கவா..? கடுப்பாகும் ஆசிரியர்கள்!

Published:

teacher - 2026

மாணவர்கள் வீட்டில் காலை, இரவு உணவாக என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை கேட்டறிந்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றுமாறு, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த அனைத்து வகை விபரங்களும், பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.

இதில், கல்வியாண்டு இறுதிவரை பல்வேறு தகவல்கள் வேண்டி, அவ்வப்போது பதிவு செய்யுமாறு உத்தரவுகள் வந்தவண்ணம் உள்ளன.

குறிப்பிட்ட மாணவர், ஆசிரியர் குறித்த, அனைத்து வகை தகவல்களும், இணையதளத்தில் இருந்தாலும், மீண்டும் மீண்டும் புள்ளி விபரங்களை, பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

school 1 - 2026

எமிஸ் இணையதளத்தை முறையாக அப்டேட் செய்து, தகவல்கள் புதுப்பிக்க மட்டும் அறிவுறுத்தினாலே, பாதி வேலை குறையும் என ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், மாணவர்களின் உணவுப்பட்டியல் பதிவு செய்யுமாறு, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், ‘கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை, காலை உணவாக என்ன சாப்பிட்டீர்கள், பால், டீ அல்லது காபி குடிப்பீர்களா, மதிய சத்துணவு சாப்பிடுகிறீர்களா, இரவு உணவாக என்ன சாப்பிட்டீர்கள்’ போன்ற, கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

ஒவ்வொரு மாணவரின் விபரங்களையும் பிரத்யேகமாக திரட்டி, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பு நேரத்தில், பாடங்களை கையாள்வதா அல்லது புள்ளிவிபரங்களுக்கு தகவல் சேகரிப்பதா என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘எமிஸ் இணையதளம் உருவாக்கி, கடந்த 10 ஆண்டுகளாக, புள்ளிவிபரங்களை மட்டும்தான் பதிவேற்றி கொண்டே இருக்கிறோம்.

மாணவர்களுக்கான சில அடிப்படை தகவல்கள் எப்போதும் மாறப்போவதில்லை. குறிப்பாக, ரத்த வகை, கல்வி உதவித்தொகை பெறுவதற்கான பிரிவு, பெற்றோர் பெயர் உள்ளிட்ட சில அடிப்படை தகவல்களை கூட, மீண்டும் மீண்டும் பதிவேற்ற அறிவுறுத்துகின்றனர்.

பாடம் நடத்துவதா அல்லது அவ்வபோது வரும் இதுபோன்ற புள்ளிவிபர உத்தரவுகளை மேற்கொள்வதா என தெரியாமல் குழம்பி தவிக்கிறோம்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களை, அதிகாரிகள் தெரிந்து கொண்டால் மட்டுமே, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த முடியும். எமிஸ் தொல்லைக்கும் தீர்வு கிடைக்கும்’ என்றனர்.

Related articles

Recent articles

spot_img