உத்தரப் பிரதேசம் மாநில தேர்தல் முடிவுகள் 403இல் பாஜக263தொகுதிகளில் இன்று பிற்பகல் 3.30மணி நிலவரப்படி முன்னிலையில் உள்ளது.
இந்த வெற்றி பிரதமர் மோடி பிரசாரத்திற்கும் கிடைத்த வெற்றி என அரசியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகத்திறனும் அவர் மாநில வளர்ச்சிக்கு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் பா.ஜ., வை மீண்டும் அரியாசனத்தில் அமர்த்தி உள்ளது.
எம்.பி.,யாக இருந்த யோகி ஆதித்யநாத் கடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதும் முதல்வரானார். ஒரு சாமியார் எப்படி நல்ல ஆட்சியை தர முடியும் என்ற விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் அவர் பொறுமையாக களம் இறங்கினார். முதலில் ரவுடிகளின் வன்முறை கலாசாரம், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்போர் மீது அதிரடி நடவடிக்கை என அவரது செயல்பாடு இருந்தது. அதனையடுத்து ஏழைகளுக்கு ரேசன் பொருள் தரமாக வழங்குதல் என நல்ல பெயரை உருவாக்கினார்.
நல்ல நிர்வாகம் , கொலை, கொள்ளைக்கு முற்றுப்புள்ளி என அவருக்கு ஒரு இமேஜ் ஏற்பட்டது. அதிலும் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் கிடைத்த வெற்றி, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் சீரமைப்பு கூடுதல் செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகரித்தது.
முதல்வரின் நல்ல நிர்வாகத்தை முன்னிறுத்தியே பிரதமர் மோடியின் பிரசாரமும் அமைந்தது. மாபியா கும்பல் வேரறுத்துள்ளோம். இந்தியாவில் தலைசிறந்த நிர்வாகி யோகி என்றும் புகழ்ந்தார். இருவரின் அயராத உழைப்பு க்கு உ.பி மக்கள் மீண்டும் பா.ஜ.வுக்கே வாய்ப்பளித்துள்ளதாக பலரும் கருதுகின்றனர்.
உ.பி., சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 255க்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இருப்பினும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட தற்போது குறைவாகவே வெற்றி பெற்றுள்ளது. இது பாஜவுக்கு சரிவாக கருதப்படுகிறது.
மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உ.பி., சட்டசபைக்கு 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெற 202 இடங்கள் தேவை. தற்போதைய நிலையில் பாஜக 263 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 304 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. அதில் பா.ஜ., மட்டும் 297 மற்றும் கூட்டணி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தாலும், கடந்த முறை பெற்ற வெற்றியை விட இடங்கள் குறைவாக கிடைத்துள்ளது.





