கொரோனா கொடுமையால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. தமிழக மற்றும் கேரள சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
தேனி-கோட்டயம் வழித்தடத்தில் குமுளி அருகேயுள்ள தேக்கடி உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.
கோடை காலங்களில் தேக்கடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்மாண்டமாக மலர் கண்காட்சி நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில் இந்தாண்டு மலர் கண்காட்சி நடைபெறுவதற்கான அனுமதியை கேரள அரசு வழங்கியது.
இதனையடுத்து தேக்கடி 14 வது மலர் கண்காட்சி தற்போது துவங்கி மே இரண்டாம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி தேக்கடி, குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் மே மாதம் 2ஆம் தேதி வரை மொத்தம் 32 நாட்கள் நடைபெற உள்ளது.
தேக்கடி பகுதியில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை காண தமிழக மற்றும் கேரள பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.







