சித்திரை விஷு பண்டிகை வரும் ஏப் 15ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
சித்திரை விஷு பண்டிகை கேரளாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை யாகும். இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை இன்று மாலை நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து ஸ்ரீகோயிலில் விளக்கேற்றிய பின்னர் 18–ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.
இன்றுவேறு சிறப்பு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு நாளை திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் நடை திறக்கப்படும். அப்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து வரவேண்டும்.
11ம் தேதி முதல் வரும் ஏப் 18வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி உண்டு. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் 15ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். காலை 4 முதல் 7 மணி வரை விஷூ கனி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை கைநீட்டமாக பிரசாதம் வழங்குவார்கள். இதற்கிடையே சபரிமலையில் உயர்த்தப்பட்டுள்ள பூஜை மற்றும் பிரசாத கட்டண உயர்வு நாளை ஏப்11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவிலில் ஏப் 11முதல் ஏப்18 வரை தினமும் படிபூஜை நெய் அபிஷேகம், உட்பட சிறப்பு பூஜைகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடைபெறும்.






