திருச்சி அருகே இன்று குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்று, கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள அஞ்சலம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் ( 55), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (50). இந்த தம்பதியினருக்கு பிரசாத் என்ற மகளும், பிரதீபா என்ற மகளும் உள்ளனர்.
மகனுக்கு திருமணமாக அதே ஊரில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார். மகள் அருகிலுள்ள வாளசிராமணி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். வெங்கட்ராமனும், சரஸ்வதியும் விவசாய தோட்டத்தின் அருகே சிறிய அளவில் ஓட்டு வீடு கட்டி அதில் வசித்து வந்தனர்.
மேலும் வெங்கட்ராமன் தோட்டத்தில் ஏராளமான பசு மாடுகளும் வளர்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கமாக பால் கறப்பதற்காக அதே ஊரைச்சேர்ந்த பால்காரர் ஒருவர் வந்துள்ளார்.
அப்போது வீட்டின் வெளியே சரஸ்வதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்காரர் உடனடியாக இதுபற்றி ஊருக்குள் சென்று கூறினார். இதையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் அதே ஊரில் இருக்கும் மகனும் விரைந்து வந்தார். அவர் தந்தையை தேடிய போது, அவர் அருகிலுள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
வெங்கட்ராமனுக்கும், சரஸ்வதிக்கும் கடந்த சில மாதங்களாகவே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. அடிக்கடி அவர்கள் சண்டை போட்டுக்கொள்வதும், உறவினர்கள் வந்து அ வர்களை சமாதானம் செய்வதும் வாடிக்கையாக இருந்தது. இடையில் சரஸ்வதியை வெங்கட்ராமன் தாக்கியும் உள்ளார்.
இந்த நிலையில் தான் நேற்று இரவு மீண்டும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு முற்றியுள்ளது. அதன் பிறகு சரஸ்வதி வீட்டிற்கு வெளியில்படுத்து உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் இருந்த வெங்கட்ராமன், அரிவாளை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்துகொலை செய்துள்ளார். பின்னர் தானும் அருகிலிருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுபற்றி அங்கிருந்தவர்கள் தா.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே தற்போதுஅஞ்சலம் மேலூர் கிராமத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று சாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் இறந்தவர்களை ஊருக்குள் வைத்திருந்தால் வெளியூரில் இருந்து வரும் உறவினர்கள் தயக்கம் காட்டுவார்கள் என்று கருதினர். எனவே போலீசார் வருவதற்குள் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று எரித்துவிட முடிவு செய்தனர். அதன்படி இருவரின் உடல்களையும் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று விறகு, தென்னை மட்டைகளை அடுக்கி எரிக்க முயன்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் வெங்கட்ராமன், சரஸ்வதி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.