இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வந்துள்ளார். முதல் நாள் பயணமாக குஜராத்தில் வந்த அவர் முதலில், காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டு ராட்டினத்தில் நூல் நூற்றினார்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார்.
தொடர்ந்து, மகாத்மா காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் அல்லது மிராபெனின் சுயசரிதையான ‘தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்’ என்ற புத்தகம் மற்றும் மகாத்மா காந்தி எழுதிய ‘கைட் டூ லண்டன்’ என்ற புத்தகத்தை போரிஸ் ஜான்சனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, சபர்மதி ஆசிரமத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தி குறிப்பு ஒன்றை எழுதினார்.
அந்த பதிவில் இந்த அசாதாரண மனிதரின் ஆசிரமத்திற்கு வருகை தந்தது, உலகை சிறப்பாக மாற்றுவதற்கு, உண்மை மற்றும் அகிம்சை போன்ற எளிய கொள்கைகளை அவர் எவ்வாறு அணி திரட்டினார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு மகத்தான பாக்கியமாக அமைந்தது என அதில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து தொழில் தொடர்பான ஆலோசனை, பிரதமர் மோடியுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகள், போரிஸ் பயணதிட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இரண்டு முறை இந்தியா வருவதற்காக திட்டமிட்டிருந்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இன்று இந்தியா வந்தார். குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் வந்திறங்கிய அவருக்கு உயர் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு, மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து முக்கிய பேச்சு நடக்கிறது. இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







