கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என சசிகலா செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.
கொடநாடு கொலை,கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் பல கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி, சசிகலா அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் பிற்பகல் 2 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது,
கொடநாடு வழக்கு தொடர்பாக காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த எங்களின் இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்துள்ளார்கள். காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவலாளி ஓம் பகதூர் மற்றும் தாய், குழந்தை மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் என்றார் சசிகலா.





