
உலகில் அதிசய மலர்கள் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.
கேரள மாநிலம் மூணாறில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரைக் காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுப்பதுண்டு.
அதேபோல், உத்தரகண்ட் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அதிசய மலராகவும் உள்ள பிரம்ம கமலம் மலரைக் காண்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதுண்டு.
இந்த பிரம்ம கமலம் பூவிற்கு பல சிறப்புகள் உண்டு. இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்க கூடியது. மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த பூ பூக்கும்.
நள்ளிரவு நேரத்தில் செடியில் இருந்து பூ மலரத் தொடங்கும். மலர்ந்த பிறகு இரண்டே மணி நேரத்தில் உதிர்ந்துவிடும். அதாவது, விடியலுக்கு முன்பே உதிர்ந்துவிடும் தன்மையுடைய பூவிது. இதன் வாசனை நிகர் வேறில்லை என்பார்கள்.
அந்த பகுதி முழுவதும் நறுமணத்தை வீசக்கூடிய அதிசயப் பூ இது.! இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச்சோந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில், உலக வெப்பநிலை மாறுபாட்டால் இந்த பூ அழிந்துவரும் தாவரப்பட்டியலில் உள்ளது.
இதனை எப்படியாவது பாதுகாப்பதற்காக உத்தரகாண்ட் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
அப்படிப்பட்ட இந்தப் பூ, கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கோவர்தன் என்பவரது வீட்டில் பூத்துள்ளது. 3 ஆண்டுகளாக வெறும் செடி மட்டுமே வளர்ந்த நிலையில், தற்போது திடீரென பூ மலர்ந்துள்ளது.
விடிவதற்குள்ளாகவே பூ உதிர்ந்துவிடும் தன்மையுடையதால், நள்ளிரவு நேரத்தில் வெண்ணிலவைப் போல இந்தப் பூ காட்சியளித்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், கோவர்தன் வீட்டிற்கு வந்து பூவிற்கு வழிபாடு செய்து வருகின்றனர். பலர் ஆச்சரியத்துடன் வந்து பூவுக்கு ஆரத்தி எடுத்தும், திருவாசகம் பாடியும் வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் பலர் பூவுடன் செல்ஃபி எடுத்தும் வருகின்றனர். இந்த பூ விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




